Wednesday, May 4, 2011

நவீன முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு

உலாவு தளத்துடன் கூடிய கூண்டுமுறை:
இந்த நவீன நாட்டுக்கோழி வளர்ப்பு முறை, குஞ்சு பொரித்த காலத்திலிருந்து அவைகளின் தினசரி வளர்ச்சி, அப்போது அவைகளின் உயிர் பாதுகாப்பு என்பனவற்றிற்கும், தட்பவெப்ப கால மாறுபாட்டால் உண்டாகும் வைரஸ் நோய்களினின்றும், வருமுன் காப்பு என்ற கவசத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு எல்லாவித நோய் களிலிருந்தும் செல், பேன் மற்றும் வயிற்றுப்பூச்சி முதலிய ஒட்டுண்ணிகளிலிருந்தும் காப்பாற்றி தொழிலில் தோல்வியில்லாத நிலையைக் கொண்டு வந்துள்ளது.

உலாவு தளத்தின் உட்புறத்தளம், காரைகள், மண் போன்றவைகளால் நிரப்பப்பட்டு கெட்டிக்கப்பட்டு பசுஞ்சாணியால் மெழுகிவிடப்படும். மழை காலங்களில் தரை, நனையாத முறையில் பாலிதீன் அல்லது உரச்சாக்கு மேல் கூரையாக தற்காலிகமாக மறைக்கப்படும். உலாவு தளத்தின் நாட்புறமும் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கோழிக் கூண்டுகள் அருகில் வேப்ப மரங்கள் வளர்க்கப்பட்டால் நோய்கள், காற்று, வெயில் என்பனவற்றினின் றும் கோழிகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக் கும். பாம்புகள் வராமல் தடுக்க, நாகதாளிச் செடியையும் வசம்புச் செடியையும் ஓரமாகப் பாத்தியமைத்து வளர்த்தால் மேலும் நல்ல பயனைத் தரும்.

கோழிகள் சில வேளைகளில் கீரைகள், பசும்புல் என்பனவற்றையும் உணவாக உட்கொள்ளும். அத்தேவையைப் பூர்த்தி செய்ய மண் சட்டிகளில் உரத்தோடு கலந்த மண்ணை நிரப்பிக் கீரைகளை வளர்த்து, வளர்ந்த பின் சட்டியுடன் உலாவு தளத்தின் உட்புறம் நான்கு பக்கமும் வைக்க, அவை ஒரு இயற்கை சூழலை உருவாக்கி, கோழிகளின் இனவிருத் தித்திறனை அதிகப்படுத்தும். கோழிகளும் சில வேகைளில் மாமிச பட்சணியே. மேற்படி தேவையைப் பூர்த்திசெய்ய சிறு பெட்டிகளில் ஓடு தளத்தில் தினசரி கூட்டி சுத்தம் செய்யும் கோழிக்கழிவுகள், இறைக்கப் பட்ட தீவன தானியங்களின் கழிவுகள் ஆகியவற்றை நல்ல மண்ணுடன் கலந்து நிழலில் ஈரப் பதத்துடன் இருக்கும்படி செய்து நான்கைந்து மண்புழுக்களை விடலாம். அவை அக்கழிவுகளை நல்ல உரமாக்குவதுடன் பல்கிப்பெருகி கோழிகளுக்கு ஏற்ற மாமிசத் தீவனமாகவும் மாறும். மேலும் பெட்டிகளிலிருந்து சேகரிக்கப்படும் மண்புழு உரம் அரை கிலோ 10 முதல் 15 ரூபாய் வீதம் விற்கப்பட்டு மேல் வருமானத்தைப் பெருக்கும்.

உலாவு தளத்தின் உட்புற, வெளிப்புற வலைகளில் அமைக்கப்படும் இன்னும் ஒரு முக்கிய பெட்டி உள்ளது. அது முட்டையிடும் பெட்டி அல்லது கூண்டு என்பது நான்கு பக்கமும், கோழிச்சல்லடையால் சுற்றி வளைத்து அடிக்கப்படுகிறது. இது தரையிலிருந்து இரண் டரை, மூன்றரை அடி உயரத்தில் கீழிருந்து கீரிப் பிள்ளை, நரி, நாய் மட்டுமின்றி பாம்பு போன்ற விஷ ஜந்துக்களாலும் தாக்கப்படா வண்ணம் காத்துக் கொள்கிறது. சவுக்குச் சட்டங் கள் பொருத்தப்பட்டு இரவில் பனி, மழை, காற்று இவைகளால் பாதிக்கப்படாமல் நல்ல உறுதியான மேல் கூரை அமைக்கப்பட்டு அமைதியுடன் கோழிகள் ஓய்வுபெற வசதியளிக்கிறது.

மேற்கண்ட முறையில் ரன் எனப்படும் உலாவுதளம் ஒரு கோழிக்கு 3 க.அடி என்ற முறைப்படி இடம் ஒதுக்கப்பட்டு நல்ல உறுதியான சவுக்கு கம்புகள் நடப்பட்டு, பூமியிலிருந்து சுமார் ஒன்றரை அடி உயர 4 பக்கம் அகலமான சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு, அதன் மேல் சட்டங்கள் பொருத் தப்பட்டு, நான்கு பக்கமும் கோழிச்சல்லடையால் தரையிலிருந்து சுமார் ஆறரை முதல் ஏழு அடி உயரமும், அளவுக்கு அரை அங்குல கோழிச்சல்லடையால் சுவர் போன்ற அமைப்பும், அவைகளுக்கு மேல் கோழிகள் பறந்துவிடாமல் தடுக்க மேற்பகுதியும் சல்லடையால் வேயப்படுகிறது. கோழி வளர்ப்போர் உள்ளே சென்றுவரக் கதவும் அமைக்கப்படுகிறது.

தூசிக்குளியல்: மேற்படி அமைப்பினுள் கோழிகளின் தீவனப் பாத்திரம், குடிநீர் பாத்திரம் என்பன வெயில் தாக்காத வண்ணம் சிறுசிறு ஓலைக் கூரைகளுடன் அமைக்கப்படுகின்றன. கோழிகளுக்கு டஸ்ட் பாத் செய்யக்கூடிய குறுமணல், சாம்பல், பூச்சிக்கொல்லி பவுடர் கொண்ட கலவையுடன் அகன்ற வாய் கொண்ட குழியமைப்பும் அமைக்கப்படுகிறது. இது கோழியின் மேல் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்ற பெரிதும் உதவுகிறது.

தீவன பாத்திரம்: தீவன பாத்திரம் எப்போதும் கோழிகள் விரும்பி உண்ணும் தானியங்களான கம்பு, கேழ்வரகு, சாணம், சோளம், வெ.சோளம், தவிடு, பிண்ணாக்கு போன்ற உணவுகளால் நிரப்பப்பட வேண்டும்.

குடிநீர் பாத்திரம்: குடிநீர் பாத்திரம் கோழிகள் குடிக்கும் தண்ணீர் அசுத்தமடையா முறையிலும் அதே நேரத்தில் குடிநீர் குறைவில்லாமல் கிடைக்கவும் வகை செய்யும் முறையில் அமைக்கப்பட வேண்டும். மேற்படி பாத்திர அமைப்பு முறை குடிக்க குடிக்க குறையா வண்ணம் தண்ணீர் வர வசதியுடையதாக இருக்க வேண்டும்.

முட்டையிடும் பெட்டி: 10 கோழிகள் கொண்ட பண்ணைக்கு ஒரு அடி அகலமும், ஒண்ணேகால் அடி நீளம், ஒன்றரை அடி ஆழம் கொண்ட அரை அங்குலப் பலகைகளான 6 முதல் 7 பெட்டிகள் நடுவில் பிரிக்கும் வசதியுடன் அமைக்கப்பட வேண்டும். பூட்டு போட்டு பூட் டக் கூடியவையும், பாதுகாப்பான முறையிலும் வெளியிலிருந்து திறந்து முட்டைகளை சேகரிக்கக்கூடிய முறையில் அமைய வேண் டும். உலாவு தளத்தின் சுவரின் மேல் உறுதியாக நிற்கவும் வளைச்சுவர் மற்றும் சட்டங்களுடன் இடைவெளி விடாமலும் அமைக்கப்பட வேண்டும். நாள்தோறும் இடப்படும் முட்டைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படவும் வேண்டும்.

முட்டைகள் பாதுகாப்பு: ஒரு புது மண்பானையில் பாதிக்குமேல் வரை குறுமணலால் நிரப்பப் பட்டு அதன்மேல் முட்டைகள் வைக் கப்பட வேண்டும். பானை அகல வாய் கொண் டதாகவும் அதன் வாயை அரை வளை மூடி போடப்பட வேண்டும். காற்றோட்டமும், ஈரப் பதமும் உள்ள இருண்ட இடத்தில் மேற்படி முட்டைகள் அடை வைக்கப்பட்டு நல்லவிதமாக குஞ்சுகள் பொறிக்கப்பட வேண்டும்.

கோழிகள் தேர்வு: நல்ல ஆரோக்கியமானகோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக் காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில் கவனமுள்ளவையாகவும் இருக்கும். வேகமான நடை, வேகமான ஓட் டம், தேவைக் கேற்ப சில மீட்டர்கள் தூரம் பறத்தல், சில நேரங்களில் கொக்கரித்தல், கூவுதலுமாக இருக்க வேண்டும். பொதுவாக சேவல்கள் இனச்சேர்க்கையில் பிரியமுள்ளவைகளாக இருக்கும். நல்ல அகலமான நெஞ்சும், நீண்ட உடலமைப்பும் நல்ல சேவலுக்கு உதாரணமாகும். கோழியின் சுகத்தை கொண்டையில் பார் என்பார்கள். நல்ல சிவந்த பளிச்சென்ற கொண்டை நல்ல சுக தேகத்தைக் குறிக்கும். கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடனும் இருக்க வேண்டும். நம் நாட்டு சூழலுக்கேற்ப வளரக்கூடிய ப்ரம்மா ரகக் கோழிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

இயற்கை முறை அடைவைப்பு: இயற்கை முறை அடை வைப்புக்கு லேசான பாரமுள்ள, அகன்ற நெஞ்சும், இறகுகள் அடர்ந்தும், அடையில் படுத்தபடி இருக்கும் நாட்டு பெட்டை கோழிகள் ஏற்றவை. சிறகுகள் அடர்ந்தும் அகலமாகவும் இருப்பது முட்டைகளை சுழற்றவும், நல்ல அரவணைப்புக்கும் உகந்தவை.

0 comments: