Friday, December 16, 2011

மின்சாரம் தயாரிக்கும் முறை


காந்தத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பதைக் காணப் போகிறோம். சாதாரணமாக இது தான் நடக்கிறது.

நான்கு வலிமை வாய்ந்த காந்தங்களின் நடுவே ஒரு ஆணியைச் செலுத்துங்கள். படத்தில் காட்டியுள்ள படி மிக நுண்ணிய செம்பு வயர்களை இந்த ஆணி, காந்தப் பெட்டியைச் சுற்றி மேலும் மேலும் கட்டுங்கள். பின்னர் இரு நுனிகளையும் ஒரு பல்பில் படுமாறு வைத்து விட்டு காந்தத்தை ஆணி மூலம் சுழற்றினால், ஹுரே! பல்பு ஒளிரும். (கவனம்: இங்கு வருவது AC மின்சாரம் ஆகும். (நேர் மின்சாரம் அல்ல) அதற்கேற்ற பல்பு, அதுவும் வோல்டேஜ் குறைந்தது தான் இவ்வாறு இயங்கும்!

மின்சாரத்தை தயாரிக்கும் சோலார் கொடிகளை உருவாக்கி ஆய்வாளர்கள் சாதனை

உலகம் முழுவதும் பற்றாக்குறையாக இருப்பது மின்சாரம். தேவை அதிகரித்து வருவதால் மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
மின்சாரத்துக்கு மாற்றாக சோலார் பவர் பயன்படுத்தப்படுகிறது. சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையும் பரவி வருகிறது. சோலார் பவர் மூலம் இயங்கும் வாட்டர் ஹீட்டர்கள், மின் விளக்குகள் உள்ளிட்ட ஏராளமான சாதனங்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது "சோலார் ஐவி" என்ற மின்சாரம் தயாரிக்கும் கொடி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நியூயோர்க் சஸ்டெயினப்ளி மைன்டட் இன்டராக்டிவ் டெக்னாலஜி(எஸ்.எம்.ஐ.டி) நிறுவனம் மற்றும் உத்தா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து டாம் மெல்பர்ன் தலைமையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு சூரிய ஒளியை கொண்டு மின்சாரம் தயாரிக்கும் சோலார் இலைகளை கொண்ட கொடிகளை தயாரித்துள்ளனர். ஏராளமான செயற்கை இலைகளை கொண்டு கொடிகளாக தயாரிக்கப்பட்டுள்ள இதற்கு சோலார் ஐவி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கொடிகளை வீட்டு வெளிப்புற சுவர்களில் படரவிட்டால் போதும். சூரிய ஒளியை கொண்டு உடனடியாக மின்சாரம் உற்பத்தி செய்யத் துவங்கும். அதன்மூலம் வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்ளலாம்.

அதிக பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சோதனை அடிப்படையில் வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியது: சோலார் ஐவி மின்சாரத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை வீட்டின் வெளிப்புற சுவர்களில் பொருத்தினால் போதும். இயற்கையான கொடிகளை போன்று கண்ணை கவரும் விதமாக அழகாக படர்ந்திருக்கும்.

வீட்டுக்கு தேவையான மின்சாரத் தேவையையும் இதன் மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம். இதில் நுண்ணிய போட்டோவோல்டெய்க் பேனல்கள் என்ற தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

தேவைப்படும் மின்சாரத்துக்கு ஏற்ப கொடிகளை படரவிடலாம். பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் கொடிகள் கிடைக்கும். இதனால் எந்த பாதிப்புகளும் இருக்காது. இறுதிகட்ட ஒப்புதலையடுத்து விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

செயற்கை இலை மின்சாரம்


அமெரிக்காவின் மசாகூசட்ஸ் தொழில்நுட்ப கல்வியகத்தின் பேராசியரான முனைவர் தானியேல் நோசேரா தலைமையிலான குழு, உலகின் முதல் செயற்கை இலையினை உருவாக்கியுள்ளனர். இந்த ஆக்கமானது அறிவியல் உலகில் குறிப்பிடத்தக்கதொரு சாதனை ஆகும். இதன் உருவம் ஆனது உண்மையான இலை போன்று இருக்காது, ஆனால் ஒரு இலையின் செயற்பாடுகளை துள்ளியமாக இது செய்யவல்லது. இந்த செயற்கை இலை தண்ணீரின் மீது மிதக்க விடப்படும் எனவும், இயற்கையில் கிடைக்கக் கூடிய சூரிய ஒளியினை உள்வாங்கி தண்ணீரின் ஹைட்ரஜன், ஆக்சிஜனை இது பிரித்து அதனூடாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எனவும் தெரிகிறது.

இயற்கை அன்னையின் செயல்பாடுகள் எப்போதுமே மனிதனுக்கு பல ஆக்கங்களுக்கு ஊக்கம் தந்துள்ளது. அந்த வகையில் மெய் இலையின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து இந்த இலையினை உருவாக்கியுள்ளனர். இதன்படி இந்த இலைகளை நீர்நிலைகளில் மிதக்க விடப்படும். அந்த இலைகளானது நீரில் இருக்கும் ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் சூரிய ஒளியினைக் கொண்டுப் பிரித்து அவற்றை வீடுகளுக்கு அருகே இருக்கும் fuel battery-களில் சேமித்து வைத்துக் கொள்ளும். அந்த பேட்ரிகளில் இருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முடியும். இந்த முறையிலான மின்சார ஆற்றலை பெறுவதன் ஊடாக சுற்றுப்புறச்சூழல் சீர்கேடு மிகவும் குறைவான முறையிலும், இந்தியா, ஆப்பிரிக்க நாடுகளில் கிராமப்புறங்களிலும் கூட மின்சாரத்தை எளிதாகப் பெறக்கூடியதாக இருக்கும்.

ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன் ஞசான் டேர்னர் என்பவரால் செயற்கை இலையினை உருவாக்கிவிட்ட போதிலும், அவரது ஆக்கம் வெகுவாக பயன்படுத்தக் கூடியதாக இல்லாமல் இருந்தது. அவரது கருவியானது அரிதான உலோகங்களால் கட்டப்பட்டு இருந்ததாலும், அவர் கண்டுப்பித்த பேட்ரியானது நிலையற்ற தன்மை வாய்ந்ததாக இருந்ததாலும் ( ஒரு நாள் மட்டுமே தாக்குப்பிடிக்கும் ) அவற்றை பொதுமக்களும் பயன்படுத்தக் முடியாமல் போனது.

ஆனால் தற்சமயம் உருவாக்கப்பட்டுள்ள இந்த இலையானது இயல்பான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது, அனைத்து வித சுற்றுச்சூழலிலும் பயன்படுத்தக் கூடியதாகவும், நிலையான பேட்ரி என்பதாலும் இதனை கிராமங்களில் மிகவும் எளிதாகப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இயற்கையான இலையை விடவும் பத்து மடங்கு அதிக ஆற்றல் பெற்றதாகவும் உள்ளது.

தற்சமயம் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இலை ஒன்று தொடர்ந்து 45 மணிநேரம் இயங்கி மின்சார ஆற்றலை உற்பத்தி செய்யக் கூடியதாக இருப்பதாகவும், இதன் ஆயுளை அதிகப்படுத்தும் ஆய்வில் ஈடுப்பட்டுள்ளதாகவும், விரைவில் இன்னும் ஆற்றல் மிக்க இலைகளை உருவாக்க முடியும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் தானியேல் நோசேரா.

Wednesday, November 2, 2011

சுயதொழில் : நீங்களும் முன்னேறலாம்-இயற்கை மீன் வளர்ப்பு!


செழிப்பான நீர்வளம் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கான சிறந்த உபதொழிலாக இருப்பது மீன் வளர்ப்பு. வழக்கமாக பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரங்களையும், அதிகளவிலான அடர்தீவனங்களையும் பயன்படுத்திதான் மீன்களை வளர்க்கிறார்கள். அவர்களுக்கிடையில் கொஞ்சம் வித்தியாசமாக அடர்தீவனத்தைக் குறைத்து, அதிகளவில் பசுந்தீவனங்களை மட்டுமே கொடுத்து சிறப்பான முறையில் மகசூல் எடுத்து வருகிறார், மயிலாடுதறை அருகே இருக்கும் ஆனந்தக்குடியைச் சேர்ந்த பிச்சை பிள்ளை.‘விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, சொந்தமாக மூணு ஏக்கர் நெல் வயல் இருக்கு. படிப்பு முடிந்ததும் பாஸ்போர்ட் ஆபிஸீல வேலை கிடைத்தது. அங்கே வேலை பார்த்து்கிட்டே இடையில் கொஞ்சம் விவசாயத்தையும் பாத்துக்கிட்டு இருந்தேன். பயி ஓய்வுக்கப்பறம் முழுநேர விவசாயியா மாறிவிட்டேன். மூணு ஏக்கர்ல், 100 குழி (33 சென்ட்) நிலத்தை மட்டும் ஓதுக்கி, அரசாங்க உதவியோட பண்ணைக்குட்டை வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்தேன். மீதி இடத்துல் வழக்கம்போல நெல்சாகுபடி நடக்கிறது.

நானும் ரசாயன விவசாயந்தான செய்துக்கிட்டிருந்தேன். ரசாயன உரத்தால வர்ற தீமைகளை அடிக்கடி கெள்விப்படுறப்போ எனக்குள்ள ஒரு உறுத்தல் வந்தது. அதனால, இயற்கைக்கு மாறனும்னு பயிற்சிகளில் கலந்துக்கிட்டேன். விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல பசுமை விகடனும் அறிமுகமாகவே, முழுசா இயற்கை வழி விவசாயத்துக்கு மாறிட்டேன். மீன் வளர்ப்புத் துறையில இருக்கற பெரும்பாலான விஞ்ஞானிகள், உரம் போட்டுத்தான் மீன் வளர்க்கச் சொல்றாங்க, விவசாயத்துலயே ரசாயனப் பயன்பாட்டைக் குறைக்கணும்னு பேசிக்கிட்டிருக்கறப்போ, ‘மீன் வளர்க்கறதுக்குப் போய் ரசாயனத்தைப் பயன்படுத்தணுமா?னு ஒரு கேள்வி எனக்குள்ள உருவாகியது. குளத்துக்கு அடியில் இருக்குற மீனுக்கானத் தீவனத் தாவரங்கள் வேகமா வளர்றதுக்குத்தான் ரசாயன உரம் பயன்படுத்தறாங்க. ஆனா, அதோட தாக்கம் தண்ணீர் மூலமாக கட்டாயம் கொஞ்ச அளவுக்காவது மீன் உடம்புக்குள்ளேயும் இருக்கத்தான் செய்யும். அதனால உற்பத்திச் செலவு அதிகரிக்கிறதோட மீனோட சுவையும் குறைந்துவிடும். எனக்கு இதில் ஒப்புதல் இல்லாததால இலை, தழைகளைக் கொடுத்தே மீன் வளர்க்கலாம்னு முடிவு பண்ணினேன். இயற்கையாவே ஆறு, குளத்துலயெல்லாம் வளர்ற மீன்களுக்கு யாரும் உரம் போடுறதில்லையே.

வீட்டு ஓரங்கள்ல தோட்டக்கால் வேலிகளில் முருங்கை, அகத்தி, சூபாபுல், சிறியாநங்கை, துளசி மாதிரியான தாவரங்கள வளர்த்து, அதையே வளர்ப்பு மீன்களுக்கு உணவா கொடுக்கலாமேனு யோசித்து அதையே நடைமுறைப் படுத்திக்கிட்டிருக்கேன். குளத்துக்குள்ள நுண்ணுயிர்கள், பாசி வளர்றதுக்கு சாணம் மாதிரியான இயற்கைக் கழிவுகளையும் கொடுக்குறேன். இப்படி வளர்த்தாலே ஆறே மாதத்தில் மீன் ஒவ்வொண்ணும் ஒரு கிலோ எடைக்கு வந்துவிடுகிறது. சுவையாவும் இருக்கு. அப்பறம் எதுக்குத் தேவையில்லாம ரசாயனத்தைப் பயன்படுத்தணும்? என்று கேள்வி எழுப்பியவர், 33 சென்ட் பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பதற்கானத் தொழில்நுட்பத் தகவல்களை, அழகாக விளக்குகிறார்.


35 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், ஒன்றரை மீட்டர் ஆழம் இருக்குமாறு குளம் வெட்டிக் கொள்ள வேண்டும் (விவசாயத் தேவைக்கான நீராதாரத்தைப் பெருக்குவதற்காக, அரசு செலவில் பண்ணைக் குட்டை அமைத்துத் தரும் திட்டத்தை வேளாண்துறை நடை முறைப்படுத்தி வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, மீன் வளர்ப்பையும் மேற் கொள்ளலாம்). அதில் தண்ணீரை நிரப்பி, குறிப்பிட்ட அளவுக்கான நீர், தொடர்ந்து தேங்கி நிற்கிறதா என்பதை உறுதி செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அதிகமாக தண்ணீர் உறிஞ்சக்கூடிய பகுதியாக இருந்தால், குளத்தின் அடியில் கரம்பை மண்ணைப் பரப்பி, தண்ணீரைத் தேக்கலாம். ஆறு, குளம் போன்ற நீர் நிலைகள் அருகில் இருக்கும் பகுதியாக இருந்தால், கவலையேபடத் தேவையில்லை. தண்ணீர் உறிஞ்சப்படாமல் தேங்கி நிற்கும்.

பண்ணைக் குட்டையில் மூன்றடி உயரத்துக்கு மட்டும் தண்ணீர் நிரப்பி, இரண்டு மாட்டு வண்டி அளவுக்கு கட்டி இல்லாத ஈர சாணத்தை தண்ணீரில் கரைத்துவிட வேண்டும். ஒரு வாரத்திலேயே சாணத்தில் இருந்து நுண்ணுயிர்கள் பெருகி விடும்.பிறகு அருகில் உள்ள மீன் விதைப் பண்ணைகளில் இருந்து, இரண்டு மாத வயதுடைய மீன்குஞ்சுகளை வாங்கி வந்து குளத்தில் விடவேண்டும். மீன்கள், அவை வளர்க்கப்படும் பகுதியைப் பொறுத்து மூன்று வகைகளாக அழைக்கப்படுகின்றன. அடி மீன் (சி.சி. காமன் கார்ப், மிர்கால்), நடுத்தட்டு மீன் (ரோகு, கெண்டை), மேல் மீன் (கட்லா, சில்வர்) எனப்படும் இந்த மூன்று வகைகளையும் கலந்து வளர்க்கும் போது குளத்துக்குள் இட நெருக்கடி இல்லாமல் மீன்கள் வளரும். பொதுவாக அனைத்து வகை மீன் குஞ்சுகளும் ஒரே விலையில் தான் விற்கப்படுகின்றன. வளர்ந்த மீன்களை மொத்தமாக விற்கும் போதும் சராசரியாக விலை நிர்ணயித்துதான் வியாபாரிகள் வாங்கவார்கள். அதனால் பல ரகங்களைக் கலந்து வளர்க்கும் போது விற்பனையில் பிரச்சனை இருக்காது. ஒரு வேளை நேரடி விற்பனை செய்வதாக இருந்தால், நமது பகுதி சந்தை நிலவரத்துக்கேற்ற அளவுக்கு ஒவ்வொரு ரக மீன் குஞ்சுகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால், 33 சென்ட் அளவு குளத்துக்கு 1,200 குஞ்சுகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குஞ்சுகளை விட்ட பிறகு நீர்மட்டத்தை நான்கடிக்கு உயர்த்தி, எப்போதும் அதே தண்ணீர் மட்டம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

குஞ்சுகளை விட்டதில் இருந்து இரண்டு நாளைக்கு ஒருமுறை தொடர்ந்து 25 கிலோ அளவுக்கு பசுஞ்சாணத்தைக் குளத்தில் கலந்து விடவேண்டும். ஒரு மாத காலம் வரை தினமும் 5 கிலோ அரிசித் தவிடு, ஒரு கிலோ தேங்காய் பிண்ணாக்கு, ஒரு கிலோ அரிசியில் வடித்த சாதம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, மூன்று பங்காகப் பிரித்து சிறிய ஓட்டைகள் உள்ள சாக்கில் இட்டு, மூன்று இடங்களில் தண்ணீரின் மேல்மட்டத்தில் மூழ்குமாறு வைக்க வேண்டும். வழக்கமாக கடலைப் பிண்ணாக்கைத்தான் அனைவரும் பயன்படுத்துவார்கள். அதைவிட குறைவான விலையில் கிடைக்கும் தேங்காய்ப் பிண்ணாக்கிலும் அதற்கு ஈடான புரதச்சத்து இருப்பதால், தீவனச்செலவு கணிசமாகக் குறையும். தவிர, தேங்காய் வாசனைக்கு மீன்கள் போட்டிப் போட்டு வந்து சாப்பிடும். இரண்டாவது மாதத்திலிருந்து அரிசித் தவிடை மட்டும் மூன்று கிலோ கூட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த தீவனங்கள் மட்டுமில்லாமல் தினமும் 5கிலோ அளவுக்கு முருங்கை, அகத்தி, சூபாபுல், புல்வகைகள் என பசுந்தீவனங்களையும் கலந்து குளத்தில் இட வேண்டும். துளசி, சிறியாநங்கை போன்ற மூலிகைகளையும் கலந்து இடலாம். நாம் இடும் பசுந்தீவனத்தில் எந்த வகையான இலைகளை மீன்கள் உண்ணாமல் கழிக்கிறதோ அந்த வகைகளை இடுவதை உடனே நிறுத்திவிட வேண்டும். அதே போல முதல் நாளே அதிகளவில் பசுந்தீவனத்தைக் கொட்டி விடாமல், கொஞ்சமாகக் கொட்டி மீன்கள் சாப்பிடும் அளவுக்கேற்ப அதிகரிக்க வேண்டும். அதிகமாகச் சாப்பிட்டால், அதிக எடை கூடுமே தவிர, வேறு தவறான விளைவுகள் எதுவும் வராது. தவிர, எந்த வகையான உயிரினமாக இருந்தாலும், தேவையான அளவுக்குத்தான் சாப்பிடும் என்பதால், தினமும் நாம் அளிக்கும் தீவனத்தில் மீன்கள் எவ்வளவு சாப்பிடுகின்றன, என்று தொடர்ந்து கவனித்து வந்தாலே எளிதாக மீன்களின் உணவுத் தேவையைக் கணித்து விடலாம்.

இதுபோல வளர்த்து வந்தால், மீன்களின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும். ஆறு மாதத்திலேயே ஒரு மீன், ஒரு கிலோவில் இருந்து ஒன்றரை கிலோ வரை எடை வந்து விடும். மீன்கள் ஒரளவுக்கு எடை வந்த பிறகு அறுவடை செய்து விற்பனை செய்யலாம். வளர்ப்பு விதங்களைச் சொல்லி முடித்த பிச்சை பிள்ளை, “போட்லா வகை மீன்கள் இயல்பாவே அதிக எடை வந்துடும். நாம இந்த மாதிரி வளக்குறப்போ ஆறு மாசத்துல ஒரு மீன் அதிகபட்சமா நாலு கிலோ வரைகூட எடை வருது. கட்லா ஆறு மாசத்துல இரண்டரை கிலோ வரை எடை வரும். புல்கெண்டை, மிர்கால் மாதிரியான மீன்கள் இரண்டு கிலோ வரை எடை வரும். சி.சி.சாதாக் கெண்டை மீன்கள் ஒன்றரை கிலோ வரையும், ரோகு அரைகிலோ எடை இருக்கும்.
33 சென்ட் நிலத்தில் 6 மாதங்களில் மீன் வளர்ப்பு செய்ய ஆகும் வரவ –செலவு கணக்கு
விவரம்
செலவு
வரவு
மீன்குஞ்சு
3,000

தீவனம்
6,000

சாணம்
2,000

உரங்கள்
1,000

மீன் மூலம் வரவு (700X85)

59,500
மொத்தம்
12,000
59,500
நிகர லாபம்

47.500
இரண்டு மாத வயதுள்ள குஞ்சுகளை வாங்கி வந்து வளர்க்கிறப்போது இறப்பு விகிதம் குறைந்துவிடறதால் எண்பது சதவிகிதம் மீன்கள் வளர்ந்து வந்துவிடும். அதனால் கூடுதல் லாபம் கிடைக்கும். எப்படிப் பார்த்தாலும் இந்த எல்லா வகை கலந்து 1,200 குஞ்சுகள் விட்டோம்னா சராசரியாக 1,500 கிலோவுக்கு குறையாம அறுவடை பண்ண முடியும். சராசரியாக கிலோ 70 ரூபாய்னு வியாபாரிங்க எடுத்துக்குறாங்க. ஆக, 1,05,000 ரூபாய்க்கு விற்பனை பண்ண முடியும். கரன்ட், தீவனம், பராமரிப்பெல்லாம் போக 75,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

Thanks http://jskpondy.blogspot.com/2011/08/blog-post.html

Thursday, September 29, 2011

சில சுவாரசியமான தகவல்கள்


பெல்ட்


இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. முசோலினி ஹிட்லருக்கு தந்தி அனுப்பினார்,''நிலைமை மிக மோசம். உணவு அவசரத்தேவை. தயவுசெய்து உடனே அனுப்பி வைக்கவும்,''ஹிட்லரிடமிருந்து பதில் தந்தி சென்றது,''உணவுப் பொருட்கள் தங்களுக்கு அனுப்ப வசதி இல்லை. வருந்துகிறேன் ஒவ்வொரு தானிய மணியும் உள்நாட்டிற்கும்,ரஷ்யப் போர்முனைக்கும் தேவைப்படுகிறது ஆகவே வயிறுகளைப் பெல்ட்டினால் இறுகக் கட்டிக் கொள்ளவும்,''முசோலினி மீண்டும் தந்தி அனுப்பினார்,''தயவு செய்து பெல்ட்டுகளையாவது அனுப்பி வையுங்கள்.''

இரவல்

பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார். அதற்கு அந்த நண்பர்,''என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,''என்றார். மார்க் ட்வைன் பேசாமல் திரும்பி விட்டார். சில நாட்கள் கழித்து அதே நண்பர் மார்க் ட்வைனிடம்,''உங்கள் தோட்டத்துக் கடப்பாறையை ஒரு நாள் இரவல் கொடுங்கள்,''என்று கேட்டார். மார்க் ட்வைன் அமைதியாகச் சொன்னார்,''என் தோட்டத்தில் தோண்டுவதாக இருந்தால் கொடுக்கிறேன்.''

ஒருவர் பெர்னாட்ஷாவைக் கேட்டார்,''ஏன் இப்படி பஞ்சத்தில் அடிபட்ட ஆள் மாதிரி இருக்கிறீர்கள்?''ஷா சொன்னார்,''என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது உண்மை. ஆனால் பஞ்சம் எப்படி வந்தது என்பது உங்கள் உருவத்தைப் பார்த்தாலே தெரியும்!''

ஒருவர் நேதாஜியிடம் சொன்னார்,''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்,''நேதாஜி சொன்னார்,''உண்மை.அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே பயம். அவ்வளவு பெரிய திருடர்கள்.''


இயல்புதானே?

பண்டித மணி கதிரேசன் செட்டியார் ஒருநாள் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரைப் பார்க்க சென்றிருந்தார். அவர் ஆதீனத்தை உடல் தாழ்ந்து வணங்கும் போது கால் தடுமாறிக் கீழே விழப்போனார். ஆதீனத்தலைவர் அவரை சட்டென்று எழுந்து தாங்கிப் பிடித்துக் கொண்டார். செட்டியார் மறுபடியும் ஆதீனத்தை வணங்கி,''எல்லாமே இயல்பாகத்தானே நடந்திருக்கிறது,சுவாமி,''என்றார். ஆதீனத் தலைவர் அவர் சொல்வது விளங்காமல்,''இயல்பாக என்ன இப்போது நடந்தது?''என்று கேட்டார். கதிரேசன் செட்டியார் விளக்கம் சொன்னார்,''எங்களைப் போன்ற அடியவர்கள் தவறுவதும், தங்களைப்போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் தாங்கி வழி நடத்துவதும் இயல்புதானே? அதுதானே இப்போது நடந்திருக்கிறது?''ஆதீனத் தலைவர் செட்டியாரின் நகைச்சுவை உணர்வு கண்டு மகிழ்ந்தார்.


திருநாள்

ஹிட்லர் ஒரு ஜோதிடரிடம்,''நான் எப்போது மரணம் அடைவேன் என்று சொல்ல முடியுமா?''என்று கேட்டார். அதற்கு ஜோதிடர்,''யூதர்களின் திருநாள் அன்றுதான் தாங்கள் மரணம் அடைவீர்கள்.''என்றார். ஹிட்லர் உடனே,''யூதர்களின் திருநாள் எப்போது வரும்?''என்று வினவினார். ஜோதிடன் சொன்னான்,''தாங்கள் இறக்கும் நாள்தான் யூதர்களின் திருநாள்.''ஜோதிடன் உயிருடன் திரும்பியிருப்பானா?


பிடித்த மதம்

மதுரையில் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு சொற்பொழிவாற்ற கவிஞர் கண்ணதாசன் அழைக்கப்பட்டிருந்தார். விழா அரங்கு முழுவதும் மாணவர்கள். குறித்த நேரத்தில் கவியரசர் வரவில்லை. மாணவர்கள் விசிலடித்து சப்தம் போட ஆரம்பித்தனர். ஒரு வழியாய் ஒரு மணி நேர தாமதத்தில் வந்து சேர்ந்தார் கவிஞர். கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தியபோது கூட மாணவர்களிடையே சலசலப்பு குறையவில்லை. பின் கண்ணதாசன் பேச ஆரம்பித்தார்,''ஒரு சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமும்,சிலருக்கு கிறிஸ்துவ மதமும் பிடிக்கும். எனக்குப் பிடித்த மதம்.....''என்று சொல்லி நிறுத்தினார். மாணவர்களிடையே அமைதி. அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அனைவருக்கும் ஆவல். அவர் தொடர்ந்தார்,''எனக்குப் பிடித்த மதம் தாமதம்,''என்று சொன்னவுடனேயே பலத்த கரவொலி எழுந்தது. அதன் பின் அவர் தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு தன் இனிய பேச்சைத் தொடர்ந்தார்.


வரவேற்பு

காந்தி அடிகள் ஒரு முறை கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனுக்கு சென்று இருந்தார். தாகூர் தேசப் பிதாவை வரவேற்கும்போது,''என்றும் இளமை பொருந்திய எங்கள் இதய அரசியான சாந்தி நிகேதன் தங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறாள்,'' என்றார். மகாத்மா சிரித்துக் கொண்டே,''அப்படியானால் இந்தக் கிழவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று சொல்லுங்கள். இல்லாவிட்டால்,என்றும் இளமையுடன் விளங்கும் உங்கள் அரசி இந்தப் பல் இல்லாத கிழவனை வரவேற்பாளா?''என்று பேசினார். காந்திஜியின் நகைச்சுவை உணர்வை அனைவரும் ரசித்தனர்.


மும்மணிகள்

ஒரு விழாவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,ரசிகமணி டி.கே.சி.,கல்கி ஆகிய மூவரும் கலந்து கொண்டனர்.வரவேற்புரை நிகழ்த்திய ஒருவர் ,''இவ்விழாவில் மும்மணிகள் கலந்துகொண்டு சிறப்பு செய்துள்ளனர்,''என்று பேசினார். அடுத்து கல்கி பேச ஆரம்பித்தார்.அவர்,''வரவேற்புரையில் மும்மணிகள் வந்திருப்பதாகக் கூறினார்கள். அதில் ஒருவர் கவிமணி..இன்னொருவர் ரசிகமணி. இதில் மூன்றாவது மணியாக இருப்பதற்கு நான் ஒரு பெண்மணியாகக் கூட இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது,''என்று பேச கூட்டத்தில் சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று.


பேசும் எந்திரம்

பிரபலமான விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து கொண்டபோது ஒரு நண்பர் அங்கு வந்து பேச ஆரம்பித்தார். எடிசனிடம் அவர் தொடர்ந்து இடை வெளியில்லாது நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். எடிசனுக்கோ தாங்க முடியவில்லை. இருந்தாலும் அங்கிருந்து நகலவும் வழியில்லை. நண்பர் அருகிலிருந்த இன்னொருவரிடம் எடிசனை அறிமுகப் படுத்தினார்,''பேசும் எந்திரமான கிராம போன் ரிக்கார்டைக் கண்டு பிடித்தது என் நண்பர் எடிசன்தான்,''என்றார். எடிசன் அவரிடம் சொன்னார்,''நான் பேசும் எந்திரத்தைக் கண்டு பிடித்தது உண்மைதான். ஆனால் நினைத்த நேரத்தில் அதை நிறுத்தி விட முடியும்.''


சீனிவாசன்

பண்டிதமணி கதிரேசன் செட்டியாருக்கு ஒருவர் விருந்தளித்தார். உணவு சாப்பிட்டு முடிந்ததும் அவருக்கு ஒரு தம்ளரில் பால் கொடுத்தனர். அதை வாங்கிய பண்டிதமணி தம்ளரை உற்றுப் பார்த்துவிட்டு,''திருப்பாற்கடலில் சீனிவாசன் பள்ளி கொண்டிருக்கிறாரே!''என்றார். விருந்தளித்தவருக்கு ஒன்றும் புரியாமல் திகைப்பு ஏற்பட்டது. உடனே பால் தம்ளரை வாங்கிப் பார்த்தார்,''அடடே,எறும்பு இருக்கிறது,''என்றார். செட்டியார் சொன்னார்,''எறும்பு சீனியில் வாசம் செய்யக் கூடியது அல்லவா? அதனால் தான் அதை சீனிவாசன் என்று சொன்னேன்''என்றார்.


உபயோகம்

1961 ல் சீனா இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. அப்போது நேரு பிரதமராக இருந்தார்,பாராளுமன்றத்தில் ஆக்கிரமிப்பு பற்றி ஏகப்பட்ட சலசலப்பு. அப்போது நேரு ,''சீனா சில பகுதிகளைப் பிடித்திருப்பது உண்மைதான். ஆனால் அவை ஒன்றுக்கும் பயன்படாத பகுதிகள். அங்கு புல் பூண்டு கூட முளைக்காது.''என்றார். உடனே சிறந்த பாராளுமன்றவாதியான மகாவீர் தியாகி எழுந்து ,''இதோ,என் தலையைப் பாருங்கள்,''என்று கூறி தனது வழுக்கைத் தலையைக் காட்டினார். பின் அவர் கேட்டார் ,''என் தலையில் கூட ஒன்றும் முளைக்கவில்லை. அதனால் அது பயனில்லாத பகுதி என்று சொல்வீர்களா?''நேரு உட்பட அனைவரும் சிரித்து விட்டார்கள்.


சொல்லின் செல்வர்

ஒரு ஊரில் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தபோது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார்,''ராமாயணத்தில் அனுமனை சொல்லின் செல்வர் என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார். போய்க்கொண்டிருந்தவர்கள் யாரை சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர். வாரியார் தொடர்ந்தார்,''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .''


அறிஞர்

கவிஞர் வாலி ஒரு அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார். அவர் கேட்டார்,''வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?''வாலி சொன்னார்,''ராமாயணத்திலே,வாலி யாரோடுசேர்கிறானோ,அவருடைய பலத்தில் பாதி,அவனுக்கு வந்து விடுமாம். அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது,அவர்களது அறிவில் பாதிஎனக்கு வந்து விடுமல்லவா?அதனால் தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்.''அறிஞர் உடனே கிண்டலாக சொன்னார்,''அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?'' வாலி சிரித்துக் கொண்டே,''நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே!''என்றார்.


தெரியுமா?

பிரபலமான நாவலாசிரியர்,ஜார்ஜ் மூர் ஒரு சிறந்த மேதை. அவருக்கு இளமையில் கர்வம் மிகுதியாக இருந்தது. டப்ளின் நகர ஆர்ச் பிஷப் டாக்டர் வால்ஷ் என்பவருக்கு ஒரு நாள் ஜார்ஜ் மூர் கீழ்க்கண்டவாறு கடிதம் ஒன்றை எழுதினார்.
அன்பார்ந்த ஆர்ச் பிஷப் அவர்களே,
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் கிறிஸ்துவ மதத்தை விட்டு விட்டேன்.
இப்படிக்கு.
ஜார்ஜ் மூர்.
அதற்கு பிஷப் பதில் எழுதினார்:
அன்பார்ந்த மூர்,
ஒரு பசுவின் வால் நுனியில் ஈ உட்கார்ந்த கதை உங்களுக்குத் தெரியுமா? 'பசுவே நான் போய் வருகிறேன்' என ஈ கூறியதாம்.அப்போது பசு தன் வால் பக்கம் திரும்பி,''நீ இவ்வளவு நேரம் இங்கே இருந்ததே எனக்குத் தெரியாதே!''என்று பதில் சொல்லியதாம்.
இப்படிக்கு
ஆர்ச் பிஷப்


உடைமை

அமெரிக்காவில் எர்க் மார்வெல் என்ற பொதுவுடைமைவாதி ஒருவர் இருந்தார். அவருக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கு பொது உடைமைக் கருத்துகள் பிடிக்காது. எனவே அவர் மார்வெல்லை அடிக்கடி கிண்டல் செய்வதுண்டு. ஒரு நாள் அவர்,''நண்பரே,உலகில் எல்லாப் பொருட்களும் பொது உடைமை ஆக்கப்பட வேண்டும் என்று கூறுகிறீரே,உமதுமனைவியையும் பொதுஉடைமை ஆக்கச் சம்மதிப்பீரா?'' என்று கேலியாகக் கேட்டார். உயிருள்ள தன் மனைவியை ஒரு பொருளுடன் ஒப்பிட்டதை மார்வெல் விரும்பவில்லை. எனினும் தன் நண்பரின் வாயடைக்க விரும்பினார். அவர் நண்பரிடம் கேட்டார் ,''தனிஉடமை தான் சிறந்தது என்று சொல்லும் நீர், உமக்கு உரிமையுடைய உன் பெண் குழந்தைகளை நீரே மணந்து கொள்வீரா?''நண்பர் வாயைத் திறக்கவில்லை.


எந்த கட்சி?

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் தமது குடியரசுக் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். கூட்டத்தில் ஒருவன் எழுந்து,''நான் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவன்,''என்று கூச்சலிட்டான். ''நீ ஏன் அந்த கட்சியில் இருக்கிறாய்?''என்று அவனிடம் கேட்டார் ரூஸ்வெல்ட். அவன் சொன்னான்,''என் தாத்தா ஜனநாயகக் கட்சியில் இருந்தார். எனவே நானும் அதே கட்சியில் இருக்கிறேன்.''ரூஸ்வெல்ட் உடனே கோபத்துடன் கேட்டார்,''உன் தாத்தா கழுதையாக இருந்திருந்தால் நீ எந்தக் கட்சியில்இருப்பாய்? அவன் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சொன்னான்,''கட்டாயம் உங்கள் குடியரசுக் கட்சியில் இருந்திருப்பேன்.''


கெளரவம்

இங்கிலாந்து அரசராக இருந்தவர் எட்டாவது எட்வர்ட். சிறுவனாக இருக்கும்போது ,ஒரு நாள் அவரது ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது,''சொர்க்கத்தில் எல்லா மனிதர்களும் ஒன்றாகக் கருதப்படுவார்கள்.''என்றார்.உடனே எட்வர்ட்,''என்ன,எல்லோரும் ஒன்றாகக் கருதப்படுவார்களா?என் பாட்டி விக்டோரியா மகாராணியாரைக் கூடவா எல்லோருடனும் ஒன்றாகக் கருதுவார்கள்?''என்று சந்தேகம் கேட்டார்.''ஆமாம்.''என்று ஆசிரியர் கூறினார்.''அப்படியானால் என் பாட்டிக்கு அது கொஞ்சம் கூடப் பிடிக்காது. அவர் அங்கே உறுதியாகப் போக மாட்டார்.''என்று அப்பாவியாகப் பதில் கூறினார் எட்வர்ட்.


சோம்பேறி

மார்க் ட்வைன் இளைஞராக இருந்தபோது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆறு மாதம் கழிந்தபின் மேனேஜர் அவரை அழைத்து வேலையிலிருந்து, அவரை நிறுத்துவதாகக் கூறினார். காரணம் என்னவென்று வினவியபோது,மேனேஜர் சொன்னார்,''நீ ஒரு சரியான சோம்பேறி. நீ இந்த நிறுவனத்துக்கு லாயக்கில்லை.''மார்க் ட்வைன் உடனே சொன்னார்,''நீங்கள் தான் சரியான சோம்பேறி.''மேனேஜருக்கு கோபம் வந்தது. தன்னை ஏன் அவ்வாறு கூறினார் என்று கேட்க ட்வைன் சொன்னார்.';நான் ஒரு சோம்பேறி என்பதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஆறு மாதம் ஆகியிருக்கிறதே? நீங்கள் ஒரு சோம்பேறி என்பதை நான் வேலையில் சேர்ந்த அன்றே தெரிந்து கொண்டேன்.''


மரியாதைக்குறைவு

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் யாரையுமே மரியாதைக் குறைவாய்ப் பேசி அறியாதவர். பாடல்களை கூட சற்று மரியாதைக் குறைவான வார்த்தைகள் வந்துவிட்டால் அதை மாற்ற வழி இருக்கிறதா என்று பார்ப்பார். கவியரசர் கண்ணதாசன் ஒரு படத்துக்கு,''யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க.''என்று ஒரு பாடலில் எழுதியிருந்தார். மெல்லிசை மன்னர் ,''என்ன கவிஞரே,இது மரியாதைக் குறைவாய் இருக்கிறதே,கொஞ்சம் மாற்றக்கூடாதா? யாரை நம்பி நான் பிறந்தேன்,போங்கய்யா போங்க,என்று எழுதக்கூடாதா?''என்று கேட்டார். அதற்கு கவிஞர் கிண்டலாகச் சொன்னார்,''டேய்,நீ ரொம்ப அடக்கமானவன். இது எனக்கு மட்டுமல்ல.ஊருக்கே தெரியும். விஜயவாடா என்கிற ஊரைக்கூட விஜயவாங்க என்று சொல்கிற ஆள் நீ. பேசாம நான் சொல்கிற பல்லவியை அப்படியே போடு .''

மலரும் நினைவுகள் - சிறுவர் பாடல்கள்

பள்ளி செல்ல விரும்பு!
பள்ளி செல்ல விரும்பு
பாடம் வெல்லக் கரும்பு;
படித்து விட்டுத் திரும்பு
பண்ண வேண்டாம் குறும்பு;
அரும்பு போல சிரிப்பாய்.



தோசையம்மா தோசை!
தோசையம்மா தோசை;
அம்மா சுட்ட தோசை;
அரிசி மாவும் உளுந்த மாவும்
கலந்து சுட்ட தோசை;
அப்பாவுக்கு நாலு;
அம்மாவுக்கு மூணு;
அண்ணனுக்கு ரெண்டு;
பாப்பாவுக்கு ஒண்ணு;
தின்னத் தின்ன ஆசை
திருப்பிக் கேட்டா பூசை.



கைவீசம்மா கைவீசு!
கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு;
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் திங்கலாம் கைவீசு;
கோயிலுக்குப் போகலாம் கைவீசு
கும்பிட்டு வரலாம் கைவீசு!



குவாகுவா வாத்து!
குவாகுவா வாத்து
குள்ளமணி வாத்து;
மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து;
செல்லமாக நடக்கும்
சின்னமணி வாத்து!



சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக்கிளியே சாய்ந்தாடு;
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோவில் புறாவே சாய்ந்தாடு!



அணிலே அணிலே ஓடி வா!
அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா;
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப்பழம் கொண்டு வா;
பாதிப்பழம் உன்னிடம்
மீதிப் பழம் என்னிடம்;
கூடிக்கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.



பச்சைக்கிளி!
பச்சைக்கிளி பாடும்
பறந்து பறந்து ஓடும்;
உச்சிக் கிளையில் ஆடும்
உலுக்கி உலுக்கி ஆடும்;
குண்டு மாம்பழம் தேடும்
கூண்டில் அடைத்தால் வாடும்!


நிலா நிலா ஓடி வா!
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா;
மலை மீது ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா;
வட்ட வட்ட நிலாவே
வண்ண முகில் பூவே;
பட்டம் போலே பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா.

Tuesday, May 31, 2011

பயனுள்ள பல‌ தகவல்கள்

1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.


2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைந்து கஷ்டப்படுபவர்கள்
http://www.bharatbloodbank.com/ இந்த இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்த தானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும்.

3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.

4) மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசக் கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்துக் கொள்ளலாம்.

5) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும்போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோ இலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொள்ள முடியும். இந்த (மார்ச்)மாதம் 23 ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4 ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM Hospital , Kodaikanalமருத்துவமனைக்கு வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

6) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சல் பெட்டியில் ஸ்டாம்ப் இல்லாமலே இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்துவிடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக்கொள்ளும்.

7) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்பநிலை கூடுதலாக 10 டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தைவிட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமய மலையில் உள்ள பனிப்பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!

அதனால் நம்மால் முடிந்தவரை,
*மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம்.
*நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.
* ப்ளாஸ்டிக் பயன்பாட்டினை முடிந்தவரை குறைக்கவும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்கவும் முயற்சிக்கலாம்.

8) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையானபிராணவாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு, மனித வளத்திற்கு பாடுபடுவோம்!

9) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்துக்கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும்: http://ruraleye.org/

10) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சைதேவைப்பட்டால் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

11) இரத்தப் புற்றுநோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்றுநோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு:
முகவரி:-

East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

12) விசேஷ வைபவங்களில் மீதமாகும் உணவை கீழே கொட்டவேண்டாம். தயவுசெய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.

Saturday, May 14, 2011

ஒரு சாமானிய விவசாயி கோடிசுவரரான வெற்றிக் கதை!

உங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது? அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்” என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல், தொடர்ந்து மா மரங்களை நடுபவர்களால்தான் இந்த உலகம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுள் ஒருவர், மரம் தங்கசாமி!

தனது பெயருடன் மரத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் த ங்கசாமி, காடு வளர்ப்பில் உலகு க்கே இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். உல கின் பல பகுதி களில் இருந்தும் வேளாண் ஆராய் ச்சியாளர்கள் தங் கசாமியின் தோட் டத்துக்கு வந்து பார்வையிடுகிறார்க ள். தனி மனிதனாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்த மங்கலத்துக்கு அருகே சேந்தன்குடி என்னும் கிராமத்தில், இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு போல் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாணவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மரம் வளர்க்கும் தங்கசாமியின் பணி மற்றும் மக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது சேவை ஆகியவற்றைப் பாராட்டி ஜனாதிபதி விருது தங்கசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று பலராலும் மலைப்பாக பார்க்கப்படும், கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் மரம் தங்கசாமி, ஒரு காலத்தில் கடன்காரராகி, கடனை அடைக்க சொத்தை விற்றுவிட்டு எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குப் போகலாமா என யோசித்துக் கொண்டிருந்தவர் என்பதுதான் உண்மை. அவர் வெற்றி பெற்றது எப்படி? அவரது கதையை அவரே சொல்கிறார்…

“எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத, உழைப்பில் நம்பிக்கை உள்ள விவசாயி நான். எனக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். எங்கள் குடும்பத்தார் அனைவரும் தினமும் பத்து முதல் பதினைந்து மணி நேரம் உழைத்தோம். ஆனாலும் நான் கடன்காரனானேன். 1975இல் வந்த கடுமையான வறட்சியின் போது, உற்பத்தி செய்த எந்த விவசாயப் பொருளுக்கும் கட்டுப்படியாகிற விலை இல்லை. இதனால் சாகுபடி செலவைக்கூட திரும்பி எடுக்கமுடியாத நிலை. விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ததால், ரசாயண உரங்களுக்குச் செய்த செலவே என்னைப் பெரிய கடன்காரனாக ஆக்கிவிட்டது. என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினேன். சொத்தை எல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டு, எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தையாவது காப்பாற்றுவோம் என்று தோன்றியது. வேறு வழி இல்லை.

அப்போது பேராசிரியர் சீனிவாசன், ‘மரப்பயிரும் பணப்பயிரே’ என்னும் தலைப்பில் அகில இந்திய வானொலியில் பேசியதைக் கேட்டேன். அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அன்றே நான் செய்துவந்த விவசாய முறைகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, மரம் வளர்ப்பது என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு நாற்பத்தைந்து வயது. நூறு தேக்கு மரங்களை நட்டேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொன்றாக அவற்றை வெட்டி விற்று வயதான காலத்தை ஓட்டுவதுதான் அப்போதைய என் திட்டம். ஆனால், ஒரு வருடத்திலேயே இருபது அடி உயரம் அவைகள் வளர்ந்தன. அது தந்த உற்சாகத்தில் நூறு மாங்கன்றுகளை நட்டேன். அப்புறம் அது அப்படியே நூறு முந்திரி, நூறு புளி என்று வளர்ந்துக் கொண்டே போனது.

மர வகைகளைத் தேடி பயணம் செய்த போது நம்மாழ்வார் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்தது என் வாழ்வின் இரண்டாவது திருப்புமுனை. அன்றே அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். தேசிய நிகழ்ச்சிகள், தேர்தல், தலைவர்களின் பிறந்த தினம் உட்பட எல்லா விஷேச நாட்களிலும் மரங்கள் நடுவேன். வீரப்பன் சுடப்பட்ட அன்று ஒரு சந்தன மரத்தை எங்கள் தோட்டத்தில் நட்டேன். எனக்கு மரம் நட ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நான் சம்பவங்களையும் பண்டிகைகளையும் பயன்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான். இப்போது என் தோட்டத்தில் நூற்றி தொன்னூறு சாதிகளைச் சேர்ந்த ஐயாயிரம் மரங்கள் இருக்கின்றன.

ஏன் ஒரே வகை மரங்களை வைக்காமல் பல்வேறு மரங்களை கலந்து நடுகிறேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம் வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பலவேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். எல்லா மர வகைகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது எல்லா மரங்களுக்கும் சரிசதமாக சத்து பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதனால், நானும் ஒரே வகையாக இல்லாமல், காடு போல் பல்வேறு வகை மரங்களை கலந்து வைத்திருக்கிறேன். வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், மகோகனி, நெல்லி, புளி என்று பல்வேறு மர வகைகளுடன் இப்போது என் பண்ணை ஒரு மாதிரி பண்ணையாக இருக்கிறது. கலப்பு பண்ணையின் மூலமே தன்னிறவு அடைய முடியும் என்பதுதான் என் அனுபவம். கடன் இல்லாத விவசாயம், நோய் இல்லாத வாழ்க்கை, நஞ்சில்லா உணவு இதன் மூலம்தான் சாத்தியம்.

திருமண வைபவங்களுக்கு செல்லும் போது மணமக்களுக்கு மரக் கன்றுகளைப் பரிசாகத் தருவேன். தலைவர்களை அழைத்து என் தோட்டத்திலும் எங்கள் கிராமத்திலும் மரம் நடும் விழாக்களை நடத்துகிறேன். என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்து அனுப்புவேன். பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகள் மத்தியில் மரம் நடுவதன் தேவையை வலியுறுத்திப் பேசுவேன். பள்ளிக்கூட வளாகத்திலேயே மரங்கள் நடுவேன். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் மரம் நடாத பள்ளிக்கூடமே இல்லை எனலாம். மேலும் தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்து பத்தாயிரம் வேப்பம் விதைகளை விதைத்திருக்கிறேன். அதில் ஆயிரமாவது மரமாகியிருக்கும். மரங்கள் என்னுடன் பேசுகின்றன, நான் அவைகளுடன் பேசுகிறேன். மரம் நடக்கும் என்பதையும் என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன்.

இதையெல்லாம் சொன்ன போதும், ஆரம்பத்தில் நான் ஊர் ஊராகச் சென்று மரம் நடுவதைப் பார்த்து விட்டும் எங்கள் கிராமத்தவர்களும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர் களும் என்னைக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். “தங்க சாமிக்கு கிறுக்குப் பிடித்து விட்டது”, “கிறுக்குப் போகிறது பார்” என்று என் காது படவே பேசினார்கள். அப்போது, “யார் கிறுக்கன் என்பதை காலம் தீர்மானிக்கும்” என்று மட்டும் அவர்களுக்குப் பதில் சொன்னேன். இப்போது அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள், “உங்களைக் கிறுக்கன் என்று சொல்லி, கடைசியில் நாங்கள்தான் கிறுக்கன் ஆகிவிட்டோம்” என்று சொல்லுவதுடன், என்னைப் பின்பற்றவும் செய்கிறார்கள்.

இப்போது நான் தினமும் ஆறு மணி நேரம் உழைக்கிறேன். ஒரு மனைவி வீட்டுச் சமையலைப் பார்த்துக் கொள்கிறாள். இன்னொரு மனைவி கால்நடைகளைப் பராமறிக்கிறாள். அவள் ஏ. எம். டி. பயிற்சி முடித்திருக்கிறாள். நாங்கள் இருவரும் கலந்து பேசி பயிர் முறையை அமைக்கிறோம்.

எங்கள் தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. முதலில் கவலையைப் போட்டு இறைத்தோம். அப்புறம் தண்ணீர் மட்டம் கிழே போய்விட்டது. அப்போது ஸ்லோஸ்பீட் மோட்டார் இஞ்சினை உபயோகித்து நூற்றைம்பது அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்தோம். அதன்பிறகு தண்ணீர் மட்டம் அதற்கும் கிழே போய்விட்டது. இப்போது, எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து முன்னூறு அடி ஆழ்குழாய் கிணறு போட்டு, நீர் மூழ்கி பம்புசெட்டை உபயோகித்துத் தண்ணீர் எடுக்கிறேன்.

நான் ரசாயண உரங்களை உபயோகிப்பதில்லை. விவசாயிகளுக்குத் தங்கம் குப்பைதான். “எருக்குழி இல்லாம ஏர் கட்டாதே. குப்பை உயர்ந்தால் குடி உயரம்” என்று அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். என் தோட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட கம்போஸ்ட் குழிகளைப் பராமரித்து வருகிறேன். பண்ணைக் கழிவுகளை அதில் நிரப்பி விடுவேன். என் தோட்டத்தில் நிறைய ஆடு, மாடுகள் இருக்கின்றன. சூபா புல், என்.பி.21 கொழுக்கட்டைப் புல், கிளேரி செரியா போன்றவற்றைப் பண்ணையில் பயிரிட்டிருக்கிறேன். எனவே ஆடு, மாடுகளுக்குத் தீவன பிரச்னை இல்லை. ஆடு, மாடுகள் போடும் சாணத்தை கம்போஸ்ட் குழிகளில் போட்டு நிரப்புவேன். மரங்களுக்கு இடையே வரிசை வரிசையாக குழிகளை வெட்டி, பண்ணைக் கழிவுகளை அதில் போடுகிறேன். மரங்களுக்கும் பயிர்களுக்கும் அடியுரமாக வேப்பம் புண்ணாக்கைப் போடுகிறேன். மண் வளம் பிரசினையே இல்லை.

எங்கள் தோட்டத்தில் களை எடுப்பதில்லை, உழுவதில்லை. கழிவுகளை அப்படியே விட்டுவிடுவோம். அவைகள் மக்கி உரமாகிவிடுகின்றன. மேலும் இந்தக் கழிவுகள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன. இப்படி கழிவுகளை அப்படியே விடும்போது, அதில் பல நுண்ணியிர்கள் உருவாகும். இந்த நுண்ணியிர்கள் மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், மண்ணைக் கிளறி உழ வேண்டிய தேவை இல்லாமல் செய்கின்றன. இப்போது என் தோட்டத்துக்கு மயில்கள் உட்பட பல்வேறு வகை பறவைகள் வருகின்றன. அவற்றில் பல நமது ஊர்களுக்கு முற்றிலும் புதியவை என்பது குறிப்பிடத்தக்கது.

பூச்சிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் எண்ணெய், பீஞ்சுருவி இலை எல்லாம் போட்டு இடிச்சி ஊறவைச்சு தெளிக்கிறேன். பூச்சி கட்டுப்படுகிறது.

விதைகளைப் பொறுத்தவரைக்கும் உயர் விளைச்சல் தரும் சில விதைகளைத் தவிர வேறந்த வெளியிடு பொருள்களையும் நான் வாங்குவதில்லை. என்னைக் கேட்டால் விவசாயிகள், விஞ்ஞானிகளிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் முனைவர்களிடமும் கொஞ்சம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவங்க ஆராய்ச்சியில் நல்லதும் வரலாம், கெட்டதும் வரலாம். சில வருடங்களுக்கு முன்னால் “ராஜ ராஜ”ன்னு ஒரு நெல் ரகத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்தார்கள். அதனைப் பயிரிட்ட எங்கள் கிராமம் மொத்தமும் நஷ்டமடைந்தது.

மரங்களுக்கு இடையே காய்கறிச் செடிகளைப் பயிரிட்டிருக்கிறேன். இதிலிருந்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கின்றன. அன் றாட பால் தேவைக்கு வீட்டிலுள்ள மாடு கறக்கிறது. திடீரென்று பணம் தேவைப்பட்டால், நாலைந்து ஆட் டை பிடித்து விற்றுவிடுவேன். என் னிடமுள்ள ஆடுகளையெல்லாம் நடமாடும் வங்கி என்றுதான் நான் சொல்வது.

நான் பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறேன். ஆனால், இப்போது என்னால் ஆங்கிலத்தில் வாசிக்க முடியும். அறிவியல் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பது எனக்குப் பிடிக்கும். இப்பொழும் தொடர்ந்து வாசிக்கிறேன்.

உலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், “ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை” என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதுதான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.

செஞ்சந்தன மரத்துக்கு அணு உலை கதிர் வீச்சைத் தடுக்கும் சக்தி இருக்கிறது. எனவே, ஜப்பானில் செஞ்சந்தனத்துக்கு தனி மவுசு. ஒரு டன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புக்குப் போகிறது. எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது செஞ்சந்தனம். எனவே எல்லோரும் செஞ்சந்தனம் வளர்க்கலாம். முக்கியமாக கதிர் வீச்சு பாதிப்பு உள்ள பகுதிகளில் செஞ்சந்தனம் வளர்ப்பது மிக நல்லது.”

விடைபெறும் போது தங்கசாமி சொன்னார். “நான் எதுவும் புதியதாக செய்யவில்லை. நமது முன்னோர்களின் வழிமுறைக்கு, நமது பாரியம்பரியத்தை நோக்கித் திரும்பியிருக்கிறேன், அவ்வளவுதான். நாடெங்கும் மரம் வளர்ப்போம். சுற்றுச் சூழலை அழகுபடுத்துவோம். அதை விடாது பாதுகாப்போம்.”

Wednesday, May 4, 2011

சோற்றுக் கற்றாழை




இது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை .


சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்றுகூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நோய் எதிர்க்கும் ஆற்றலை கற்றாழை வழங்குகிறது


வேறு பெயர்கள்- சோற்றுக் கற்றாழை, கன்னி, தாழை. குமரி


தாவரப்பெயர்- AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.



சதைப்பற்றுடன் கூடிய தடிப்பான அடுக்கு மடல் கொண்ட செடி வகை. கற்றாழை மடல்கள் இருபுறமும் முள்போல் சொரசொரப்பான ஓரங்களைக் கொண்டிருக்கும், பக்கக் கன்றால் உற்பத்தியைப் பெருக்கும்.


இலை மற்றும் வேர், இலையில் உள்ள சதைப்பற்றான ஜெல். ஒடித்தால் வரும் மஞ்சள் நிற திரவம் வரும்.


தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், ஏழு முறை கழுவுவது. அதை சுத்தி செய்யும் முறையாக சித்தர்களால் கூறப்படுகிறது .


சிறந்த மலச்சிக்கல் போக்கி.


ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும்.


கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன் படுகிறது.


இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும்.
முக அழகு சாதனமாகப்பயன் படுகிறது.


அழகு சாதன பொருள்களின் அத்தியாவசிய மூலப் பொருளாக விளங்குகிறது.
சித்த மருந்துவர்களால் ‘குமரி’ என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.


எப்பொழுதும் வாடாத வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்வடியது. பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்க குறுச்செடி. இலைகள் அடுக்கடுக்காக ரோஜா இதழ்கள் போன்று அமைந்திருக்கும்.


கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.


தளிர்பச்சை இளம்பச்சை கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.


இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான். இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்இ சர்ம நோய்களையும் குணப்படுத்துகிறது.


முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.


ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.


இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.


கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.


நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது. மேலும் இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.


உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.
சோற்றுக் கற்றாழை சோறை எடுத்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைமுழுகி வர மயிர் வளர்வதுடன் நல்ல தூக்கமும் உண்டாகும்.


வைட்டமின் சத்துகள் குறைவதால் மூட்டுகளுக்கு இடையே உள்ள கூழ் போன்ற திரவம் குறைகிறது.இதனால் மூட்டுவலி ஏற்படுகிறது. இவற்றை சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால் மூட்டு வலி என்பது குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி விடக்கூடும்.


மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற "அலோசன் ஹெல்த் டிரிங்க்' உதவும். இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.


மனித உடலில் மடிந்து போன செல்களை மீண்டும் உயிர்ப்பித்து எல்லா வகையான மூட்டு வலிகளுக்கும் இந்த பானம் நிவாரணம் அளிக்கிறது.

சுகம் தரும் சோற்றுக் கற்றாழை வீட்டிலேயே இருக்கவேண்டிய ஒரு அழகிய மூலிகை .அழகுதரும் மூலிகை .

நவீன முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு

உலாவு தளத்துடன் கூடிய கூண்டுமுறை:
இந்த நவீன நாட்டுக்கோழி வளர்ப்பு முறை, குஞ்சு பொரித்த காலத்திலிருந்து அவைகளின் தினசரி வளர்ச்சி, அப்போது அவைகளின் உயிர் பாதுகாப்பு என்பனவற்றிற்கும், தட்பவெப்ப கால மாறுபாட்டால் உண்டாகும் வைரஸ் நோய்களினின்றும், வருமுன் காப்பு என்ற கவசத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு எல்லாவித நோய் களிலிருந்தும் செல், பேன் மற்றும் வயிற்றுப்பூச்சி முதலிய ஒட்டுண்ணிகளிலிருந்தும் காப்பாற்றி தொழிலில் தோல்வியில்லாத நிலையைக் கொண்டு வந்துள்ளது.

உலாவு தளத்தின் உட்புறத்தளம், காரைகள், மண் போன்றவைகளால் நிரப்பப்பட்டு கெட்டிக்கப்பட்டு பசுஞ்சாணியால் மெழுகிவிடப்படும். மழை காலங்களில் தரை, நனையாத முறையில் பாலிதீன் அல்லது உரச்சாக்கு மேல் கூரையாக தற்காலிகமாக மறைக்கப்படும். உலாவு தளத்தின் நாட்புறமும் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கோழிக் கூண்டுகள் அருகில் வேப்ப மரங்கள் வளர்க்கப்பட்டால் நோய்கள், காற்று, வெயில் என்பனவற்றினின் றும் கோழிகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக் கும். பாம்புகள் வராமல் தடுக்க, நாகதாளிச் செடியையும் வசம்புச் செடியையும் ஓரமாகப் பாத்தியமைத்து வளர்த்தால் மேலும் நல்ல பயனைத் தரும்.

கோழிகள் சில வேளைகளில் கீரைகள், பசும்புல் என்பனவற்றையும் உணவாக உட்கொள்ளும். அத்தேவையைப் பூர்த்தி செய்ய மண் சட்டிகளில் உரத்தோடு கலந்த மண்ணை நிரப்பிக் கீரைகளை வளர்த்து, வளர்ந்த பின் சட்டியுடன் உலாவு தளத்தின் உட்புறம் நான்கு பக்கமும் வைக்க, அவை ஒரு இயற்கை சூழலை உருவாக்கி, கோழிகளின் இனவிருத் தித்திறனை அதிகப்படுத்தும். கோழிகளும் சில வேகைளில் மாமிச பட்சணியே. மேற்படி தேவையைப் பூர்த்திசெய்ய சிறு பெட்டிகளில் ஓடு தளத்தில் தினசரி கூட்டி சுத்தம் செய்யும் கோழிக்கழிவுகள், இறைக்கப் பட்ட தீவன தானியங்களின் கழிவுகள் ஆகியவற்றை நல்ல மண்ணுடன் கலந்து நிழலில் ஈரப் பதத்துடன் இருக்கும்படி செய்து நான்கைந்து மண்புழுக்களை விடலாம். அவை அக்கழிவுகளை நல்ல உரமாக்குவதுடன் பல்கிப்பெருகி கோழிகளுக்கு ஏற்ற மாமிசத் தீவனமாகவும் மாறும். மேலும் பெட்டிகளிலிருந்து சேகரிக்கப்படும் மண்புழு உரம் அரை கிலோ 10 முதல் 15 ரூபாய் வீதம் விற்கப்பட்டு மேல் வருமானத்தைப் பெருக்கும்.

உலாவு தளத்தின் உட்புற, வெளிப்புற வலைகளில் அமைக்கப்படும் இன்னும் ஒரு முக்கிய பெட்டி உள்ளது. அது முட்டையிடும் பெட்டி அல்லது கூண்டு என்பது நான்கு பக்கமும், கோழிச்சல்லடையால் சுற்றி வளைத்து அடிக்கப்படுகிறது. இது தரையிலிருந்து இரண் டரை, மூன்றரை அடி உயரத்தில் கீழிருந்து கீரிப் பிள்ளை, நரி, நாய் மட்டுமின்றி பாம்பு போன்ற விஷ ஜந்துக்களாலும் தாக்கப்படா வண்ணம் காத்துக் கொள்கிறது. சவுக்குச் சட்டங் கள் பொருத்தப்பட்டு இரவில் பனி, மழை, காற்று இவைகளால் பாதிக்கப்படாமல் நல்ல உறுதியான மேல் கூரை அமைக்கப்பட்டு அமைதியுடன் கோழிகள் ஓய்வுபெற வசதியளிக்கிறது.

மேற்கண்ட முறையில் ரன் எனப்படும் உலாவுதளம் ஒரு கோழிக்கு 3 க.அடி என்ற முறைப்படி இடம் ஒதுக்கப்பட்டு நல்ல உறுதியான சவுக்கு கம்புகள் நடப்பட்டு, பூமியிலிருந்து சுமார் ஒன்றரை அடி உயர 4 பக்கம் அகலமான சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு, அதன் மேல் சட்டங்கள் பொருத் தப்பட்டு, நான்கு பக்கமும் கோழிச்சல்லடையால் தரையிலிருந்து சுமார் ஆறரை முதல் ஏழு அடி உயரமும், அளவுக்கு அரை அங்குல கோழிச்சல்லடையால் சுவர் போன்ற அமைப்பும், அவைகளுக்கு மேல் கோழிகள் பறந்துவிடாமல் தடுக்க மேற்பகுதியும் சல்லடையால் வேயப்படுகிறது. கோழி வளர்ப்போர் உள்ளே சென்றுவரக் கதவும் அமைக்கப்படுகிறது.

தூசிக்குளியல்: மேற்படி அமைப்பினுள் கோழிகளின் தீவனப் பாத்திரம், குடிநீர் பாத்திரம் என்பன வெயில் தாக்காத வண்ணம் சிறுசிறு ஓலைக் கூரைகளுடன் அமைக்கப்படுகின்றன. கோழிகளுக்கு டஸ்ட் பாத் செய்யக்கூடிய குறுமணல், சாம்பல், பூச்சிக்கொல்லி பவுடர் கொண்ட கலவையுடன் அகன்ற வாய் கொண்ட குழியமைப்பும் அமைக்கப்படுகிறது. இது கோழியின் மேல் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்ற பெரிதும் உதவுகிறது.

தீவன பாத்திரம்: தீவன பாத்திரம் எப்போதும் கோழிகள் விரும்பி உண்ணும் தானியங்களான கம்பு, கேழ்வரகு, சாணம், சோளம், வெ.சோளம், தவிடு, பிண்ணாக்கு போன்ற உணவுகளால் நிரப்பப்பட வேண்டும்.

குடிநீர் பாத்திரம்: குடிநீர் பாத்திரம் கோழிகள் குடிக்கும் தண்ணீர் அசுத்தமடையா முறையிலும் அதே நேரத்தில் குடிநீர் குறைவில்லாமல் கிடைக்கவும் வகை செய்யும் முறையில் அமைக்கப்பட வேண்டும். மேற்படி பாத்திர அமைப்பு முறை குடிக்க குடிக்க குறையா வண்ணம் தண்ணீர் வர வசதியுடையதாக இருக்க வேண்டும்.

முட்டையிடும் பெட்டி: 10 கோழிகள் கொண்ட பண்ணைக்கு ஒரு அடி அகலமும், ஒண்ணேகால் அடி நீளம், ஒன்றரை அடி ஆழம் கொண்ட அரை அங்குலப் பலகைகளான 6 முதல் 7 பெட்டிகள் நடுவில் பிரிக்கும் வசதியுடன் அமைக்கப்பட வேண்டும். பூட்டு போட்டு பூட் டக் கூடியவையும், பாதுகாப்பான முறையிலும் வெளியிலிருந்து திறந்து முட்டைகளை சேகரிக்கக்கூடிய முறையில் அமைய வேண் டும். உலாவு தளத்தின் சுவரின் மேல் உறுதியாக நிற்கவும் வளைச்சுவர் மற்றும் சட்டங்களுடன் இடைவெளி விடாமலும் அமைக்கப்பட வேண்டும். நாள்தோறும் இடப்படும் முட்டைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படவும் வேண்டும்.

முட்டைகள் பாதுகாப்பு: ஒரு புது மண்பானையில் பாதிக்குமேல் வரை குறுமணலால் நிரப்பப் பட்டு அதன்மேல் முட்டைகள் வைக் கப்பட வேண்டும். பானை அகல வாய் கொண் டதாகவும் அதன் வாயை அரை வளை மூடி போடப்பட வேண்டும். காற்றோட்டமும், ஈரப் பதமும் உள்ள இருண்ட இடத்தில் மேற்படி முட்டைகள் அடை வைக்கப்பட்டு நல்லவிதமாக குஞ்சுகள் பொறிக்கப்பட வேண்டும்.

கோழிகள் தேர்வு: நல்ல ஆரோக்கியமானகோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக் காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில் கவனமுள்ளவையாகவும் இருக்கும். வேகமான நடை, வேகமான ஓட் டம், தேவைக் கேற்ப சில மீட்டர்கள் தூரம் பறத்தல், சில நேரங்களில் கொக்கரித்தல், கூவுதலுமாக இருக்க வேண்டும். பொதுவாக சேவல்கள் இனச்சேர்க்கையில் பிரியமுள்ளவைகளாக இருக்கும். நல்ல அகலமான நெஞ்சும், நீண்ட உடலமைப்பும் நல்ல சேவலுக்கு உதாரணமாகும். கோழியின் சுகத்தை கொண்டையில் பார் என்பார்கள். நல்ல சிவந்த பளிச்சென்ற கொண்டை நல்ல சுக தேகத்தைக் குறிக்கும். கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடனும் இருக்க வேண்டும். நம் நாட்டு சூழலுக்கேற்ப வளரக்கூடிய ப்ரம்மா ரகக் கோழிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

இயற்கை முறை அடைவைப்பு: இயற்கை முறை அடை வைப்புக்கு லேசான பாரமுள்ள, அகன்ற நெஞ்சும், இறகுகள் அடர்ந்தும், அடையில் படுத்தபடி இருக்கும் நாட்டு பெட்டை கோழிகள் ஏற்றவை. சிறகுகள் அடர்ந்தும் அகலமாகவும் இருப்பது முட்டைகளை சுழற்றவும், நல்ல அரவணைப்புக்கும் உகந்தவை.

செம்மறி ஆடு வளர்ப்பு

ராமநாதபுரம் வெள்ளை, கீழக்கரிசல், நீலகிரி, திருச்சி கருங்குரும்பை, மேச்சேரி, மெரினோ.

உள்ளூர் இனங்கள் - இது வெவ்வேறு இடத்தைப் பொறுத்து மாறும்

· மெரினோ - கம்பளிக்கு உகந்தது
· ராம்பெளலட் - கம்பளி மற்றும் கறிக்கு ஏற்றது.
· சோவியோட் - கறிக்கு ஏற்றது
· செளத் டான் - கறிக்கு ஏற்றதுநல்ல தரமான இன வகைகள், ஆட்டுத் தொழுவம் அமைப்பது, வளமான செம்மறி ஆடுகள் உற்பத்தி போன்றவற்றைப் பற்றி ஏதேனும் விபரம் தேவைப்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்தையோ அல்லது வேளாண் அலுவலகத்தையோ அணுகவும்.

நிலம் அதிகமாக இருக்குமெனில், செம்மறி ஆடுகளை மேயவிட்டும், வீட்டில் தொழுவத்தில் பராமரித்தும் வளர்க்கலாம். வறட்சியான மற்றும் மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத்தில், செம்மறி ஆடு வளர்ப்பு ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. சிறு மற்றும் குறுநில விவசாயிகள், நிலமற்ற வேளாண் தொழிலாளிகள், குறைந்த முதலீடு செய்து நிறைய லாபம் பெறலாம்.

நன்மைகள்:
· அனைத்து சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப்படியான பராமரிப்பு அவசியம் இல்லை.
· கறியின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது
· உரோமம் கம்பளி தயாரிக்கவும் மற்றும் கறி இறைச்சிக்காகவும் பயன்படுகிறது.
· சராசரியாக ஒவ்வொரு முறையும் 1-2 குட்டிகள் ஈனுகிறது.
·ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கிறது.
· எருவை சேர்த்து நிலத்தை வளமாக்குகிறது.

வெள்ளாடு வளர்ப்பு

உள்ளூர் இனங்களையே வாங்கவேண்டும். காலம்காலமாக அந்த பகுதியில் வளர்ந்து, சூழ்நிலைக்கு ஏற்ப வாழப்பழகி இருக்கும் உள்ளூர் ரகங்களை வாங்கி வளர்ப்பதே சிறந்தது.

பலமுறை குட்டிபோட்டவயதான ஆடுகளை வாங்கவேண்டாம். மாடுகளைப் போல ஆடுகளையும் பல்பார்த்து வாங்க வேண்டும். அதாவது கீழ்தாடை முன்பற்கள் விழுந்து முளைப்பதாகும். ஓராண்டு வரை 8 பால்பற்கள் இருக்கும். பின் இரண்டாண்டு பற்களாக விழுந்துமுளைக்கும். ஓராண்டு முடிந்தபின் இரு பற்கள் விழுந்து முளைக்கும். தோராயமாக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள கீழ்க்கண்டபடி பல் பார்த்து வயது கணக்கிட்டு வாங்க வேண்டும். ஆடுகளுக்கு 2 பல் இருந்தால் 1 வயது. 4 பல் இருப்பின் 2 வயது. 6 பல் என்றால் 3 வயது. 8 பல் என்றால் 4 வயது என்று கொள்ளலாம். எனவே இளம் ஆடுகளையே வாங்க வேண்டும்.

ஓரிரு ஆடுகளை வாங்குபவர்கள் 3, 4 குட்டி போடும் ஆடுகளை அறிந்து வாங்க வேண்டும். முதுகு பிடித்து பார்த்து ஆட்டின் முதுகெலும்பின் தசை செழிப்பாக வளர்ச்சியடைந்திருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். பாலுக்கென்று ஆடு வாங்குவதானால் கால் சற்று குட்டையாகவும், மடி திரட்சியாகவும் இருக்க வேண்டும். நோயற்ற ஆடுகளைப் பார்த்து வாங்க வேண்டும். பட்டிகளில், பண்ணைகளிலிருந்து வாங்குவது சிறந்தது.

மாடு வளர்ப்பு

கறவை மாடுகள் மற்றும் கன்றுகளை தேர்வு செய்வதென்பது ஒரு கலையாகும். கறவை மாடுகளை தேர்வு செய்ய கீழ்க்கண்ட குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.

மாட்டு சந்தைகளில் மாடுகளை தேர்வு செய்யும் பொழுது அவற்றின் இன குணாதிசயங்களையும், பால் உற்பத்தி திறனையும் கவனிக்க வேண்டும்.

மாடுகளின் வரலாற்றை பிரதிபளிக்கக் கூடிய பராம்பரிய பதிவேட்டை காணவும்.

கறவை மாடுகள், அவை ஈனக்கூடிய முதல் 5 பருவத்திலேயே அதிகப்பால் கொடுக்கிறது. எனவே கறவை மாடுகளை முதல் அல்லது இரண்டாவது முறை ஈனும் பொழுது, ஈன்ற 1 மாதம் கழித்து தேர்வு செய்யவும்.

தொடர்சியாக கறந்து, அவற்றின் சராசரியை கொண்டு மாட்டின் பால் உற்பத்தியை கணக்கிடலாம்.

யார் வேண்டுமானலும் கறப்பதற்கு ஏற்றாக இருக்க வேண்டும்.

அக்டோபர் - நவம்பர் மாதத்தில் மாடுகளை வாங்குவது நல்லது.

ஈன்ற 90 நாட்களில் அதிகபட்ச பால் உற்பத்தி கிடைக்கிறது.

சொட்டு நீர் பாசன முறை

நீர் வளம் குறைந்து போனதால், பாரம் பரிய விவசாயத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கிடைக்கும் குறைவான நீரை, சிக்கனமாக பயன் படுத்த வேண்டும் என்பதற்காக சொட்டு நீர் பாசனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், அதுவரை வாய்க்கால்கள் மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் முறை மாற்றப்பட்டு, குழாய்கள் மூலம் நீர் சொட்டு, சொட்டாக பயிர்களுக்கு தேவையான நீரை, அதன் வேர்ப்பகுதிக்கே பாய்ச்சப்படுகிறது ஒரு ஏக்கரில் வாய்க்கால் அமைத்து நீர் பாய்ச்சல் முறையில் 60 சதவீத பரப்பில் மட்டும் பயிர் செய்ய முடியும். சொட்டுநீர் பாசன முறையில் 100 சதவீத பரப்பளவில் பயிர் செய்யலாம், அதிக லாபம் பெறும் வாய்ப்பை சொட்டு நீர் பாசனம் ஏற்படுத்தி கொடுக்கிறது.

நன்மைகள்:
களைச் செடிகள் நீரின்றி வளர இயலாது.
மகசூலை அதிகப்படுத்தும்
சாதாரண பாசனத்தை ஒப்பிடுகையில், 70% நீரை இப்பாசனத்தின் மூலம் சேமிக்கலாம். அவ்வாறு சேமித்த நீரைக் கொண்டு இன்னும் அதிகமான நிலங்களுக்கு பாசனம் அளிக்கலாம்.
பயிர் திடமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதோடு, வேகமாக முதிர்ச்சி அடையும்
விரைவாக முதிர்ச்சி அடைவதால் குறைந்த காலத்தில் முதலீட்டுக்கான வரவு கிடைத்து விடும்
உரம் பயன்பாட்டு திறனில் 30% அதிகம்
உரம், ஊடுபணி மற்றும் ஆட்களுக்காக ஆகும் செலவும் குறைக்கப்படும்
நீரில் கரையும் உரத்தை குழாய்கள் மூலமே கொடுக்கலாம்.
ஏற்ற இறக்கம் உடைய நிலங்கள், உப்பு நிலம், நீர்தேங்கும் நிலம் மணற்பாங்கான மற்றும் மலை பகுதிகள் அனைத்தையும் இப் பாசனத்தின் கீழ் கொண்டுவந்து சாகுபடி செய்யலாம்


குறைபாடுகள்:
இதனை அமைக்க ஆகும் செலவு அதிகம்
சொட்டு நீர் குழாய் அடைப்பு.
சாகுபடி நிலம் அதிகமாக வெப்பம் அடைகிறது

தெளிப்பு நீர் பாசன முறை

வாய்க்கால் நீர் பாசன முறையில் செய்யப்படும் விவசாயத்தில் செலவாகும் நீரில் மூன்றில் ஒரு பங்கு இருந்தாலே இந்த முறைக்கு போதுமானது. இதனால் குறைவான தண்ணீரில் அதிக பரப்பில் பயிர் செய்யலாம். கிணற்றில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை இந்த முறையில் "ரெயின் கன்' மூலம் 120 அடி விட்டத்திற்கு மழைத்துளி போன்று பயிர்களின் மேல் நீர் தெளிக்கலாம். வால்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் தேவையான பகுதிக்கு மட்டும் நீர் தெளிக்கலாம். இதன் மூலம் உரம், பூச்சி மருந்து ஆகியவற்றையும் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம். தெளிப்பு முறை கருவி குறைந்தது 5,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய் வரை விலையில் உள்ளது. இதனால் ஆள் பிரச்னையும் குறையும், தண்ணீரும் மீதமாகும். தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கலாம்.

நன்மைகள்:
தெளிப்பு நீர் பாசனத்தால் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கலாம்.
நீர் சேமிப்பால் அதிக அளவு பயிர் செய்யலாம்.
வரப்பு பாத்தி அமைக்க வேண்டாம் ஆள் பிரச்னையும் குறையும்.
நீரில் கரையும் உரத்தை குழாய்கள் மூலமே கொடுக்கலாம்.
மலைப்பகுதி மற்றும் மேடுபள்ளங்கள் நிறைந்த பகுதிகளுக்கம் ஏற்றது
பூக்கள் எளிதில் கொட்டாத பயிர்களுக்கும் ஏற்றது.
சாதாரண பாசன முறையை விட 30-40 சதவீதம் நீர் குறைவு.

குறைபாடுகள்:
இதனை அமைக்க ஆகும் செலவு அதிகம்
விவசாயிகளிடம் நிலப்பரப்பு குறைவு.
காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் போது பயன்படுத்த முடியாது.

Tuesday, April 26, 2011

பனை நுங்கு வியாபாரம்

சுரண்டை அருகே கடையாலுருட்டி பகுதியில் பனை நுங்கு வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.​

சித்திரை மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கி தற்போது கோடை வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.​ திருநெல்வேலி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.​ பகல் நேரத்தில் அனல் காற்றும்,​​ இரவு நேரத்தில் புழுக்கமும் ஏற்படுகிறது.​ இதனால் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல்,​​ வெம்மையை தணித்துக் கொள்ள குளிர்பானங்கள்,​​ பழவகைகள் என பல வழிகளை மக்கள் நாடுகின்றனர்.​ அதேபோல் இளநீர்,​​ வெள்ளரிக்காய்,​​ தர்ப்பூசணி ஆகியவற்றையும் மக்கள் அதிகம் பயன்படுத்தப்படுத்துகின்றனர்.​ கோடைக்காலம் என்பதால் இளநீர் ஒன்று ரூ.20 வரை விற்கப்படுகிறது.​ வெள்ளரிக்காய் மற்றும் தர்ப்பூசணிக்கும் குறைந்தபட்சம் ரூ.5 கொடுக்க வேண்டியுள்ளது.

நோய் தீர்க்கும் பதநீர்




பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.

Wednesday, January 19, 2011

லாரித்தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயத்துக்கு பயன்படுத்தும் அவலம்



கடையாலுருட்டி அருகே உள்ள ஒரு தோட்டத்தில் தண்ணீர் இல்லாமல் தென்னை மரங்கள் கருகி நிற்கின்றன

நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதியான கடையாலுருட்டி, சுரண்டை, சேர்ந்தமரம், ஊத்துமலை, பாண்டியாபுரம், ஈச்சந்தா, தன்னூத்து, வெள்ளாளன்குளம், குலசேகரமங்கலம், அருணாசலபுரம், அரியநாயகிபுரம், வீரசிகாமணி, குலையநேரி, குறிச்சன்பட்டி உள்பட 300க்கும் மேற்பட்ட கிராங்களில் பெரும்பான்மையான தொழில் விவசாயமாகும்.


தற்போது இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டுவிட்டன. தண்ணீர் இல்லாததால் ஆயிரக்கணக்கான தென்னை மற்றும் பனை மரங்கள் கருகிவிட்டன. இதனால் மரங்களை வெட்டி விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சி காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் நஞ்சை, புன்செய் நிலங்கள் வீட்டுமனையாகவும், காற்றாலை அமைப்பதற்கும் விற்று வருகின்றனர். இங்கு கால்நடைகளான ஆடு, மாடுகள் முக் கிய வளர்ப்பு தொழிலாகும். வறட்சி காரணமாக அவைகளை கேரளாவுக்கு அடி மாட்டு விலைக்கு விற்கும் நிலை உள்ளது.


வறட்சி காரணமாக செங்கல் உற்பத்தி, கால் நடை வளர்ப்பு, வியாபாரம், கட்டுமானபணிகள், மண் பானை செய்தல் ஆகிய தொழில்கள் முடங்கிவிட் டன. இப்பகுதி இளைஞர் கள் தொழில் இல்லாமல் வேலைதேடி கேரளா, ஆந்திரா, திருப்பூர் கோவை போன்ற பகுதிகளுக்கு செல்கிறார்கள். வறட்சியில் இருந்து விடுபட குற்றாலம், செண்பகாதேவி அருவிகளில் அணைகட்டி தண் ணீரை சேமித்து அதை குடிநீருக்கும், விவசாயத்திற் கும் பயன்படுத்தலாம். இதனால் குடிநீர் பிரச்னை தீர வழி உள்ளது. இது போல் கருப்பாநதி அணை கால்வாய் களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றினால் நிலத்தடிநீர் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முருங்கைக் கீரைகயின் பலன்கள்

மனித உடலுக்கு ஆரோக்கியத்தையும், தேவையான புரதச் சத்துகளையும் அளிப்பதில் காய்கறிகளும், பச்சைக் கீரைகளும் முக்கியப் பங்காற்றுகின்றன.

கீரையைப் பச்சைப் பசேல் என்று அதன் நிறத்திலேயே சமைப்பதுதான் மிகவும் சிறந்தது.

இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.

மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். முருங்கைக் கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும், உறுதியும் கிடைக்கிறது.

முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்.

முருங்கைக் கீரை உண்பதால், தாதுபலம் பெருகுவதுடன், இரத்த அழுத்தமும் குணமாகும்.

கொழுப்புச் சத்து குறைவதுடன், நீரிழிவு நோயும் குணமாகிறது.

முருங்கை கீரை சாப்பிடுவதால் காமாலை குறையும். கண்பார்வை தெளிவாகும்.ஆனால், மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

கூடிய வரை கீரை வகைகளைச் சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியமாக இருங்கள்

முருங்கையில் தவசு முருங்கை, கொடி முருங்கை, நன்முருங்கை, காட்டு முருங்கை, கொடிக்கால் முருங்கை என்று பல வகைகள் இருக்கின்றன. இவற்றில் வீடுகளில் மரமாக இருக்கும் முருங்கையை நன்முருங்களை என்று நம் முன்னோர்கள் அழைத்து வந்துள்ளனர்.

முருங்கை மரத்தின் இலை, பூ, காய் ஆகியவை சிறந்த உணவாகப் பயன்படுகின்றன. இவை சிறந்த பத்திய உணவாகவும் கருதப்படுகின்றன. அதோடு முருங்கை மரத்தின் அடி முதல் முடி வரை அனைத்துப் பகுதிகளும் சிறந்த மருந்தாகவும் பயன்படுகின்றன.

முற்றிய விதைகளை நட்டோ அல்லது முற்றிய கிளைகளை வெட்டி நட்டோ முருங்கை மரத்தை இனவிருத்தி செய்யலாம் . முருங்கை மரம் சுமார் 9 மீட்டர் வரை வளரும்.

காற்றடித்தால் எளிதில் ஒடிந்துவிடும். முருங்கை மரம் வளர அதிக தண்ணீர் தேவையில்லை.

முருங்கை இலையில் வைட்டமின் “ஏ”, வைட்டமின் “சி”, இரும்பு சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன.

முருங்கைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வைட்டமின் “ஏ” பற்றாக்குறை தொடர்பான கண்நாய்கள் நீங்கும். கண்கள் குளிர்ச்சியடையும். பார்வை தெளிவடையும். பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகை, காமாலை போன்ற நோய்கள் குணமாகும்.