Wednesday, September 9, 2009

மாற்று முறை பயிர் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கலெக்டர் சண்முகம் பேசியதாவது: விவசாயத் தொழில் என்பது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிலாகும். இந்த விவசாய சாகுபடி தொழிலில் பல சோதனைகள் ஏற்பட்டாலும் அவ்வப்போது சின்ன சின்ன சாதனைகளை விவசாயிகள் படைத்து வருகின்றனர். நாட்டில் பல தொழில்களில் பல பதவிகள் இருந்தாலும் நிலையான பதவி என்றால் அது விவசாயி என்ற பதவி தான். தற்போதைய விவசாய சாகுபடியில் தட்பவெட்ப நிலை, பருவ கால சூழ்நிலையும் மாறி வருகிறது. காலம் கடந்து மழை பெய்வது, கடல் சீற்றம், கடல் உள்வாங்குவது போன்ற இயற்கை சூழ்நிலையால் விவசாயம் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இன்றைய கால கட்டத்தில் நமது பகுதியில் நல்ல மழை பெய்து சாகுபடி செழித்திருக்க வேண்டும். ஆனால், மழை பொய்ததால் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து வருகிறது. நம் நாட்டில் நீர்வளம் அதிகம் உள்ள 40 சதவிகித நிலப்பரப்பில் நீர் ஆதாரத்தை கொண்டு விவசாயம் செய்யப்படுகிறது. மீதமுள்ள 60 சதவிகித நிலப்பரப்பில் மானாவாரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது விவசாயத்தில் பருவகால சவால்களை அதிகம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கேற்றவாறு திட்டங்களையும் நாம் வகுக்க வேண்டியுள்ளது.
பருவகால மாற்றத்தால் மட்டும் விவசாயம் குறைந்து போகவில்லை. புகை, காற்று, ஓசோன் படலம் உள்ளிட்ட இயந்திரங்களை பயன்படுத்துவதாலும் பருவ சூழல் மாறி விவசாயம் குறைந்து வருகிறது.
விவசாயத்தை பெருக்கும் வகையில் 1968ம் ஆண்டு முதல் சுவாமிநாதனின் அறிவுரைப்படி ரசாயன விவசாயத்தை நாம் கையாண்டு வருகிறோம். ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தால் விவசாயத்தை மேம்படுத்தி வருகிறோம். தற்போது சாகுபடி செய்யப்பட்ட விளைபொருள்களை நாம் சந்தை நிலவரத்துக்கு ஏற்றவாறு சேமித்து வைத்து விற்பனை செய்ய பழகி கொள்ள வேண்டும். தற்போது விவசாயத்தில் நாம் இரண்டு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறோம். முதலில் ரசாயனங்களையும், அதற்கு ஏற்ற உரங்களையும் பயன்படுத்துவதால் மனித உடல்களுக்கு தீங்கு ஏற்படுகிறது. இரண்டாவதாக நாம் ஒரே மாதிரியான சாகுபடி பயிரை தேர்ந்தெடுப்பது.
விவசாயிகள் ஒவ்வொரு காலத்திலும் மாற்றுமுறை சாகுபடியை மேற்கொள்ள வேண்டும். நிலத்தில் சாகுபடி செய்த உடன் நிலத்தை ஆறப்போட்டு மீண்டும் கால இடைவெளி விட்டு வேறு பயிர் சாகுபடி செய்தால் பூச்சிகள் அழிந்துவிடும். அல்லது தொடர்ந்து ஒரே மாதிரியான விவசாயம் செய்தால் அதனை தாக்கும் பூச்சிகளும் அப்படியே நிலத்தில் தங்கி விவசாயத்தை பாதிக்கும் வகையில் தாக்கி வரும். உலகத்தில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உணவு உற்பத்தியை நாம் அதிகப்படுத்த வேண்டிய தருணத்தில் உள்ளோம். இயற்கை முறையில் சாகுபடி செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. வயலில் சாகுபடியின் போது கிடைக்கும் அனைத்து பொருள்களையும் தானியங்களை தவிர மற்றவற்றை நிலத்துக்கே கொடுத்துவிட வேண்டும். ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் சில முன்னோடி விவசாயிகள் விவசாய சாகுபடியில் வெற்றி பெற்று வருகின்றனர். அதேபோல் அதிகமான விவசாயிகள் இயற்கை சாகுபடியிலும், மாற்றுமுறை பயிர் சாகுபடியிலும் ஈடுபட்டு உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் சண்முகம் பேசினார். இந்திய உணவு கழக ஆலோசனை குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கல்யாணசுந்தரம், அன்பழகன், திருவிடைமருதூர் யூனியன் தலைவர் ராமலிங்கம், துணைத் தலைவர் இளங்கோவன், ஆர்.டி.ஓ., செங்குட்டுவன், வானொலி உழவர் சங்கத் தலைவர் கிலி சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

0 comments: