Sunday, September 13, 2009

செம்மை நெல் சாகுபடி

செம்மை நெல் சாகுபடி பற்றிய முறையான ஆய்வு 2002 - 2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சட்டிஸ்கர், குஜராத் போன்ற மாநிலங்களில் திருந்திய நெல் சாகுபடி முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆந்திரப்பிரதேசம்

வேர்ல்ட் வைட் பண்ட் மற்றும் ஆந்திர வேளாண் பல்கலைக் கழகம் இணைந்து திருந்திய நெல்சாகுபடி முறையை மதிப்பீடு செய்ய செயல் திட்டம் தீட்டின. கடந்த பீசானம் பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட இச்செயல் திட்டம் தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. இச்செயல்திட்டம் 11 மாவட்டங்களில் பரவியுள்ள 250 விவசாயிகளுக்கு பயன் அளித்துள்ளது. வயல்வெளிப் பார்வையின்போது விவசாயிகளிடம் இம்முறை பற்றிய கலந்தாய்வு நடத்தப்பட்டது. திருந்திய நெல் சாகுபடியின் மூலம் நெல்லுக்கு செலவிடப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதாகவும், விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர் (வினோத் கெளட், வேர்ல்ட் வைட் பண்ட் - செய்தி அறிக்கை இதழ் எண் 15. ஜீன் 2005). 2003 ஆம் ஆண்டு கார் பருவத்தில் வயல் வெளி செயல் விளக்கங்கள் மூலம் 22 மாநிலங்களில் திருந்திய நெல்சாகுபடி முறை மேற்கொள்ளப்பட்டது. விதையின் அளவு ஒரு எக்டருக்கு 5 கிலோவாக இருப்பதால் 95% விதையினை தங்களால் சேமிக்க முடிந்தது என்றும் பயிருக்கு செலுத்தப்படும் தண்ணீரின் அளவு 50% குறைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். உருளை கருவியால் களையெடுப்பதிலும், இளநாற்றை நடுவதிலும், தண்ணீர் பராமரிப்பிலும் சில சிரமங்கள் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் திருந்திய நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் பயிர்கள் வளமாக இருப்பதாக தெரிவித்தனர்.

மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள திரு தாமோதர் ரெட்டி என்பவர் இம்முறையை செயல்படுத்தி 30 மூட்டைகள் அதிகமான மகசூலை பெற்றுள்ளார். ஆனால் இவர் இதற்காக செய்த ஆரம்ப முதலீடு ரூ. 3000 மட்டுமே ஆகும். அவரைப் போலவே மற்ற விவசாயிகளும் இம்முறையின் மூலம் மிகுந்த மகழ்ச்சி அடைந்துள்ளனர் என்று செல்வி உமாமகேஸ்வரி கடந்த மே 10 ஆம் தேதி மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ளராமனப்பாடுகிராமத்தில் நடந்த திருந்தி நெல் சாகுபடி உழவர் தினத்தில் தெரிவித்துள்ளார்.

வாசன் மற்றும் சி.எஸ்.ஏ இணைந்து வேர்ல்ட் வைட் பண்ட் - இக்ரிசாட் செயல்திட்டத்தின் உதவியுடன் ஆந்திரமாநிலத்தில் உள்ள 1000 விவசாயிகளுடன் பணியாற்றி, விவசாயிகளின் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவித்தனர்.

இந்தியாவில் முதன்முதலாக ஆந்திர மாநிலத்தில் திருந்திய நெல் சாகுபடி பற்றிய கொள்கை ஏற்படுத்தப்பட்டது. திருந்திய நெல் சாகுபடியின் வெற்றியை கண்டு, ஆந்திர முதலமைச்சரும், வேளாண் அமைச்சரும் திருந்திய நெல் சாகுபடியை பிரபலப்படுத்துவதற்கு ரூ. 4 கோடி நிதியுதவியுடன் கூடிய திட்டத்தை அறிவித்தனர். திருந்திய நெல் சாகுபடி முறையினை பற்றிய கலந்தாய்வை ஹைதராபாத்தில் உள்ள திரு. நாகரத்தினம் நாயுடு அவர்களின் பண்ணையில் நவம்பர் 15, 2005 ல் வேர்ல்ட் வைட் பண்ட் நடத்தியது (தி ஹிந்து நாளிதழ், நவம்பர் 16, 2005 ஆந்திர பிரதேசம்). அதன் பின்னரே 4 கோடி ரூபாய் செயல்திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதில் முதல் கட்ட நடவடிக்கையாக

1. விவசாயிகளுக்கு திருந்திய நெல் சாகுபடியை ஒவ்வொரு கிராமங்களிலும் செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிப்பதற்காக பெருந்திட்டம் தீட்டபப்ட்டது.

2. உருளை கருவிகள் மற்றும் குறியீடுகளை விவசாயிகளுக்கு 50% சதவீத மானியத்துடன் அளித்தல்

3. திருந்திய நெல்சாகுபடி விவசாயிகளுக்கு இலவச மின்சார நிறுத்தத்தில் இருந்து விலக்கு அளித்தல்

தமிழ்நாடு

கிள்ளிகுளத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின், வேளாண்மை கல்லூரியில் 2003 - 2004 திருந்திய நெல்சாகுபடி பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 53% நீரை திருந்திய நெல் சாகுபடி முறையின் மூலம் சேமிக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது. இந்த கணக்கெடுப்பில், 21 நாட்கள் இளவயதுடைய நாற்றுகள் 15 x 10 செ.மீ என்ற இடைவெளியில் சாதாரணமாக நடவு செய்யப்பட்டது. ஆனால் திருந்திய சாகுபடி முறையில் 14 வயதுடைய இளநாற்றுகளை 20 x 20 செ.மீ என்ற இடைவெளியில் நடவு செய்தனர். திருந்திய நெல் சாகுபடி முறையில் 2.5 செ.மீ உயரத்திற்கு நீர் கட்டப்பட்டது. பஞ்சு கட்டும் பருவம் வரை, முதலில் கட்டிய நீர் வடிந்து மண்ணின் மேல் பரப்பில் சிறு கீரல் வெடிப்புகள் தோன்றிய பின் மறுமுறை நீர் கட்டப்பட்டது.

ஆனால் சாதாரண முறையில் 5 செ.மீ உயரத்திற்கு நீர் நிறுத்தப்பட்டது. விளைச்சலை ஒப்பிட்டு பார்த்தபொழுது, திருந்திய நெல் சாகுபடி முறையில் 28% அதிக விளைச்சல் கிடைத்தது (3, 892 கிலோ / எக்டர்).

தமிழ்நாடு மாநில நிதியுதவியுடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் திருந்திய நெல் சாகுபடி முறையை இரு வயல்வெளி திட்டம் மூலம் மதிப்பீடு செய்தது. இதில் தாமிரபரணி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் திருந்திய நெல் சாகுபடியின் மூலம் 7227 கிலோ/எக்டர் மகசூல் கிடைத்துள்ளதாக தெரியவந்துளள்து. ஆனால் தற்போதைய சாதாரண சாகுபடியின் மூலம் 5637 கிலோ/எக்டர் மகசூல் மட்டுமே கிடைத்தாக தெரிவித்துள்ளனர். திருந்திய நெல் சாகுபடி முறையில் சராசரியாக 1 எக்டருக்கு 1570 கிலோ மகசூல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சுமார் 31 விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையை பின்பற்றி ஒரு எக்டருக்கு 8 டன்னுக்கு மேல் மகசூல் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் திருந்திய நெல் சாகுபடி முறையை பரிந்துரை செய்துள்ளது. 2004 ஆம் ஆண்டில், அரசு வேளாண் துறை நெல்சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் திருந்திய நெல் சாகுபடி பற்றிய செயல்முறைகளை மேற்கொண்டது.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள ஜால்தா மற்றும் பல்ராம்பூர் ஒன்றியங்களில் திருந்திய நெல் சாகுபடி அனுபவம் பற்றி ஆய்வைபிரதாண்அமைப்பு நடத்தியது. இந்த ஆய்வு கார் பருவத்தில் சுமார் 110 விவசாயிகளிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், திருந்திய நெல் சாகுபடி முறையின் செயல் முறைகளில் பாதியை கடைபிடித்தால் கூட 32% அதிக மகசூல் பெறமுடியும் என்று தெரிவித்துள்ளனர். பல்ராம்ப்பூரில் 59 பாத்திகளில் திருந்திய நெல் சாகுபடி மற்றும் சாதாரண சாகுபடி ஆகிய இருமுறைகளின் மகசூல் ஒப்பீடு செய்யப்பட்டது. இதில் ஒரு எக்டருக்கு திருந்திய நெல் சாகுபடி முறையில் 6,282 கிலோவும் சாதாரண சாகுபடியில் 4194 கிலோவும் கிடைத்தது. அதாவது திருந்திய நெல் சாகுபடியில் 49.8% அதிக மகசூல் கிடைத்துள்ளது. மேலும் வைக்கோல் உற்பத்தியும் திருந்திய நெல்சாகுபடியில் (5150 கிலோ/எக்டர்) சாதாரண முறையைவிட (3456 கிலோ/எக்டர்) அதிகமாக கிடைத்தது.

ஆனால் ஜால்தா ஒன்றியத்தில் 11.9% அதிக மகசூலை மட்டுமே பெறமுடிந்தது. வறட்சியினாலும், ஒரே ஒரு களையெடுத்ததனாலும், சற்று வயதான நாற்றுகளை நடவு செய்ததாலும் விளைச்சல் குறைந்திருந்தது.

குஜராத்

குஜராத் வேளாண்மை பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், திருந்தி நெல் சாகுபடியில் 5,813 கிலோ/எக்டர் மகசூலும், சாதாரண முறையில் 5840 கிலோ/எக்டர் மகசூலும் கிடைத்தது. ஆனால் 46% நீர் மட்டும் செலவிடப்பட்டது,

பாண்டிச்சேரியில் ஆரோவில்லில் உள்ள அண்ணபூர்ணா கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி முறை பற்றிய சோதனை நடத்தப்பட்டது. பின்னர் ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இச்சோதனையை நடத்தியது.

பிரதாண்அமைப்பு ஜார்கண்ட் மாநிலத்திலும் திருந்திய நெல் சாகுபடியை செயல்படுத்தியது.

பஞ்சாப் மாநிலத்தில் ஜெ.டி.எம். சங்கம், குறைந்த அளவு நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி செய்ய பல்வேறு யுக்திகளை புகுத்தி வருவதாக சுதீந்தர் ஷர்மா கூறியுள்ளார். திருந்திய நெல் சாகுபடி முறையின் மூலம் 60-70 % தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் இது நீர் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

1 comments:

Muthu kumarasamy S said...

congrats done a good job